நம்பி தான் ஓட்டு போட்டோம்..! முதல்வர் எங்களை கண்டுக்கல.. வேதனையில் ஆசிரியர்கள்..!
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல் ஆசிரியர்கள் உட்பட இசை, தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட பாடங்களை அவர்கள் சொல்லித் தருகின்றனர். இவர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து கோரி வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திமுகவை நம்பி வாக்களித்ததாகவும் ஆனால் இதுவரை தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும், நுாறு நாட்களில் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை, என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: பொத்தாம் பொதுவாக உள்ளது, மனுவை திருத்த உத்தரவு.. வலுவற்ற வாதங்கள் வைக்கிறதா அரசு..?
மதுரையில் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறிகையில், அ.தி.மு.க., ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்று அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எங்களுக்காக குரல் கொடுத்து பேசினார். அதை நம்பி அவருக்கு வாக்களித்தோம். ஆட்சிக்கு வந்தபின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடத்தினார் என்றும் தெரிவித்தார்.
அதில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அந்த முகாமிலும் நாங்கள் மனு அளித்தோம். அப்போது மயிலாடுதுறையில் நடந்த முகாமில், ஸ்டாலின் என்ற ஆசிரியரிடம் முதல்வர் பேசுகையில், அந்த ஸ்டாலின் கோரிக்கையை இந்த ஸ்டாலின் நிறைவேற்றித்தருவான் என்றார். ஆனால் 4 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேறவில்லை எனக் குற்றம் சாட்டினார். தற்போது ரூ.12,500 என்ற குறைவான அளவில் ஆண்டிற்கு 11 மாதங்கள் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது. 14 ஆண்டு களாக பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகிறோம். கடைசி பட்ஜெட்டிலும் அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றமடைந்தோம் என தெரிவித்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து 2024 வரை தாக்கலான பட்ஜெட்டுகளில் கல்வித்துறைக்கு ரூ.1,53,827 கோடியும், 2025 பட்ஜெட்டில் ரூ.46,767 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு எவ்வித பயனுமில்லை என்ற சுட்டி காட்டிய அவர், தற்போது 12 ஆயிரம் பேர் தான் உள்ளோம். காலமுறை சம்பளம் வழங்க ரூ.300 கோடி தேவை. எனவே, 110 விதியின் கீழாவது எங்கள் கோரிக்கையான பணிநிரந்தரம், அடிப்படை சம்பளம் ரூ.20,600 நிர்ணயம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை - இப்போதைக்கு ஊதியம் இல்லை... கைவிரிக்கும் தமிழக அரசு..!