சொத்து வரியை உயர்த்தி பாமர மக்களை வஞ்சிக்காதீங்க.. ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!
சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் பதிவுத்தறையின் தொடர் நடவடிக்கையால் பாமர மக்களும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பணத்தாலும், மனத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.
தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களில் சொத்து மதிப்பை 50 முதல் 60% வரை உயர்த்தியுள்ளது என்றும் புதிதாக உருவாக்கவுள்ள மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயம் செய்வதற்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினால் மனைப்பிரிவிற்கு மதிப்பு நிர்ணயம் செய்ய உள்ள சர்வே எண்ணை சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்சம் உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்துகொடுப்பது நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் ஏற்கனவே வழிகாட்டி மதிப்பை 50 முதல் 60% வரை உயர்த்தியுள்ள நிலையில், மீண்டும் மாவட்ட பதிவாளர் நிர்ணயம் செய்ய வேண்டிய மதிப்பில் இருந்து மேலும் 30 முதல் 50% வரை சேர்த்து மதிப்பு நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினார். நடுத்தர மக்கள் தங்களது சேமிப்பில் ஒருகுறிப்பிட்ட தொகையில் வீட்டுமனை வாங்க நிர்ணயம் செய்திருந்தால் கூடுதல் தொகை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அவர்களின் கனவு நிறைவேறாமல் போகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த 3 மாதத்திற்கு நீலகிரியில் படப்பிடிப்புகளுக்கு தடை.. சுற்றுலாப் பயணிகளுக்கே முக்கியத்துவம்..!
தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்தினால் கூட தமிழ்நாடு அரசுக்கு வருமானம் வரும் என்றும் மக்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை.
ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் பெயரிலான பத்திரப்பதிவு..! கட்டண குறைப்பு திட்டம் நாளை முதல் அமலாகிறது..!