புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
புனித வெள்ளி, மத எல்லைகளைத் தாண்டிய வாழ்க்கையின் ஆழமான அர்த்தங்களையும் மதிப்புகளையும் மறுபரிசீலனை செய்ய ஊக்குவிக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி புனித வெள்ளி நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மை சமயத்தினராக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறித்துவப் பெருமக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும் என்றும் அரசின் வருமானம் ஒருநாள் தடைபடுவதைத் தவிர, மதுக்கடைகளை மூடுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மெயின் டீமாம்..! பாஜக பெண் நிர்வாகியுடன் செல்ஃபி... முகமெல்லாம் மலர்ந்த சீமான்..!
எல்லோருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட மக்களின் சமய உணர்வுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவது சிறிதும் அறமற்றச்செயல் என்றும் இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் திராவிட மாடல் மதச்சார்பின்மையா என்ற கேள்வியும் எழுகிறது என கூறினார்.
ஆகவே, திமுக அரசு கிறித்துவப் பெருமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென்றும், அதனை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ஒரே மேடையில் சீமான், அண்ணாமலை; பகீர் கிளப்பும் பாஜக அரசியல் கணக்கு... பதற்றத்தில் திராவிட கட்சிகள்...!