×
 

எல்லா கட்சி வாக்குகளை சேர்த்தாலும் திமுகவை மிஞ்ச முடியாது.. எதிர்க்கட்சிகளை தெறிக்கவிடும் அமைச்சர் எஸ். ரகுபதி.!

எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அனைத்தும் சேர்ந்தாலும் எங்கள் வாக்கு வங்கியை மிஞ்ச முடியாது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்.

சென்னையில் அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக முதல்வரின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்துள்ளது. பலன் அடையாத குடும்பமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இன்றைய ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை அண்மையில் வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பும் உணர்த்துகினறது. கருத்துக்கணிப்புகளை நாங்கள் நம்புவதில்லை. என்றாலும் அதற்கும் ஒரு வலிமை உண்டு எனப் பார்க்க வேண்டும். அந்தக் கருத்துக்கணிப்பிலே, இன்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தால்கூட 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47% வாக்குகளை வாங்கியிருந்த திமுக கூட்டணி 52% வாக்குகளை பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிமுக 23%-லிருந்து 20% ஆக குறையும், என்டிஏ கூட்டணி - 21% எனவும் கருத்துக்கணிப்பில் கூறியிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலைதான் வீசுகிறது, எதிர்ப்பு அலை கொஞ்சமும். திராவிட மாடல் நாயகர் ஸ்டாலினின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஆனால் சிலர் ஏதாவது சம்பவத்தை மிகைப்படுத்தி இந்த ஆட்சியை குறை கூறுகிறார்கள்.

முந்தைய ஆட்சியில் எந்தப் பயனும் கிடைக்காத மாணவ, மாணவியர்கள் திராவிட மாடல் ஆட்சியில் பயன் அடைந்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் அனைவரும் வரவேற்கும் ஆட்சியாகத் திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது. விரைவில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழக மக்களின் மனநிலையைப் புரிந்துக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது. அதே நேரம் அதிமுக கலகலத்து வருகிறது.  23%-லிருந்து 20% அதிமுக வாக்கு வங்கி சரிந்து இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு. புதிய கட்சிகள், இருக்கிற கட்சிகள் எடுத்துபார்த்தாலும் என்டிஏ என 21% தான் வருகிறது. எங்களைப் பொறுத்தவரை 52% என்பதை இன்னும் உயர்த்த முதல்வர், துணை முதல்வர் பணிகளை மேற்கொள்வார்கள்.



இரண்டு தினங்களுக்கு முன்பே, அதிமுக இபிஎஸ்ஸின் கட்டுப்பாட்டில் இல்லை என்று சொன்னேன். அதை அங்கே இருப்பவர்கள் பேசுவதிலேயே  தெரிந்து கொள்ளலாம். கட்சி தலைவர் இபிஎஸ், வேலுமணி, தங்கமணி என யாராக இருந்தாலும், எல்லோருமே எனக்கு ஜூனியர்கள்தான் என்று செங்கோட்டையன் சொன்னதாகத் தகவல் வந்திருக்கிறது.
இதிலிருந்து அவர் எந்த அளவிற்கு ஆதங்கத்தில் இருக்கிறார் என்பதை உணரலாம்.  அதிமுக கலகலத்து கொண்டு இருக்கிறது.  ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலே முதல் முறையாக இரட்டை இலைக்கு வாக்களித்து வந்தவர்கள் உதய சூரியனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

கண்ணுக்கு தெரிந்த வரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா சொன்னார். நாங்கள் எதிரிகள் இல்லை என்று சொல்லவில்லை. எதிரிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய வாக்கு வங்கி குறைந்துகொண்டு போகிறது. எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி அனைத்தும் சேர்ந்தாலும் எங்கள் வாக்கு வங்கியை மிஞ்ச முடியாது. அதற்கு ஏற்றால் போல் மக்கள் விரும்பும் ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார்” என்று ரகுபதி தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: உங்க கூட்டணி கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சொல்லுங்க.. செல்வபெருந்தகைக்கு கடிதம் எழுதிய அன்புமணி.!

இதையும் படிங்க: திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்- துரைமுருகன் அதிரடி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share