இரு அமைச்சர்கள் நீக்கம்.. 2026இல் திமுக ஆட்சி அகற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.. அண்ணாமலை சரவெடி.!
திமுக அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக இராண்டு அமைச்சர்களின் நீக்கத்தைக் காண்கிறேன்
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக இராண்டு அமைச்சர்களின் நீக்கத்தைக் காண்கிறேன் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இதுதொடர்பாக அண்ணாமலை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது. வேறு வழியின்றி, திமுக அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது.
ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, இத்தனை ஆண்டு காலம் தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உச்ச நீதிமன்றம் விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, வேறு வழியின்றி, இன்று அவரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார்.
ஏற்கனவே பல ஊழல் வழக்குகள், கழுத்துக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கையில், நாள்தோறும் நமது தாய் மற்றும் சகோதரிகளை, அநாகரீகமான வார்த்தைகளால் குறிப்பிட்ட அமைச்சர் க. பொன்முடி பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, வேறு வழியின்றி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால், திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஊழலும், தரம்தாழ்ந்த செயல்பாடுகளும்தான் அதன் ஒட்டு மொத்த பக்கங்களையும் நிரப்பியிருக்கின்றன. ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும்தான், திமுக செய்து வரும் அரசியலின் இத்தனை ஆண்டு காலத் தூண்களாக இருக்கின்றன.
திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, தற்போது தமிழக மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகையில், திமுகவின் அடித்தளமே ஆட்டம் காண்பதைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே இதனை நான் காண்கிறேன்." என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, செந்தில் பாலாஜி.. பதவியைப் பதம் பார்த்த வழக்கும் வாய்த் துடுக்கும்.!
இதையும் படிங்க: விஜய்யைப் பார்க்க கூட்டம் வரும்.. ஆனா ஓட்டு வராது.. ராஜேந்திர பாலாஜி தாறுமாறு கலாய்ப்பு.!