×
 

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் ஜெயிலா? ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!!

கொடுத்த கடனை மிரட்டி கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு வகையான கடன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அதனை மக்களும் வாங்கி வருவது வழக்கமாகி விட்டது. அவற்றை வசூலிப்பதில் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதாவது, வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களும் கடனை வசூலிக்கும் போது மிரட்டுவது, மரியாதை குறைவாக பேசுவது, தாக்குவது, வீட்டின் முன் அமர்வது உள்ளிட்ட செயல்களில் கடன் வசூலிப்பாளர்கள் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு சிலர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலமுன் அறங்கேறி வருகிறது.

இந்த நிலையில், வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் சபை கூடிய நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன்படி, தனிநபர்கள், தனி நபர்கள் குழு, சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இதையும் படிங்க: இதுதான் தமிழகத்தின் சட்டப்போராட்டம்... ஆளுநருக்கு எதிரான தீர்ப்புக்கு உதயநிதி கருத்து!!

இந்த சட்டத் திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம். கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வலுக்கட்டாய நடவடிக்கைகளால் கடன் பெறுபவர் அல்லது அவரது உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள். இச்சட்ட முன் வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளி வர முடியாது.

மேலும் இதுகுறித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனை வசூலிக்க முறையற்ற வழியை நாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முன்ளாள் எம்.எல்.ஏ-க்களுக்கு பென்ஷன் உயர்வு.. ஹாப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share