விஜய் ஒரு குழந்தை..! நாங்க பல ரேஸ்ல ஜெயிச்சவங்க.. அமைச்சர் சேகர்பாபு சரமாரி தாக்கு..!
அரசியலில் விஜய் ஒரு குழந்தை என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அப்போது, மன்னராட்சி முதல்வரே உங்கள் ஆட்சி பற்றி கேள்வி கேட்டால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்றும் நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும் எனவும் 2026 இல் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும் என்றும் கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி என்று தெரிவித்தார்.இந்த நிலையில் விஜய் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது, விஜய் பேசுவதை கேட்டால் ஒரு சினிமா பாடல் தான் ஞாபகம் வருவதாகவும் அந்த பாடல்களின் வரிகளையும் மேற்கோள்காட்டி பேசினார். மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே, மக்களாட்சி காணச்செய்ததெங்கள் நெஞ்சமே, எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே, கல்லில் வீடுகட்டித் தந்ததெங்கள் கைகளே கருணைத் தீபம் ஏற்றிவைத்த தெங்கள் நெஞ்சமே இதைதான் விஜய்க்கு பதிலாக கூற விரும்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பக்தர்கள் இப்படி தான் இறந்தாங்க.. காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026 ஆம் ஆண்டு தூக்கிப் பிடிப்பார்கள் என்றும் முதலமைச்சர் எங்கு போனாலும் வரவேற்கும் கூட்டத்தில் 80 சதவீத கூட்டம் பெண்கள் தான் என்றும் சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.விஜய் ஒரு தவறுகின்ற குழந்தை, நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள் என்றும் பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
சிறை என்றால் என்ன,, ஆர்ப்பாட்டக் களம் என்றால் என்ன, பொதுக்கூட்டம் என்றால் என்ன, மக்கள் பணி என்றால் என்ன இவையெல்லாம் தெரியாதவர்கள் தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து பத்து பேருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து அதை போட்டோ எடுத்து கொண்டால், அதையும் ஊடகங்கள் வெளியிட தயாராக இருந்தால் அவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: காமராஜரையே களங்கப்படுத்துகிறார் அண்ணாமலை..! அமைச்சர் சேகர்பாபு காட்டம்..!