×
 

46 ஆயிரம் பேரை பலி கொண்ட 'காசா போர்' முடிவுக்கு வந்தது: ஹமாஸ் சமரச ஒப்பந்தத்தை ஏற்றது, இஸ்ரேல்!

இத்தாலிக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த காசா போர் முடிவுக்கு வருகிறது.

பிணை கைதிகளை விடுவிப்பது தொடர்பான சமரச ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

காசா பிணைக் கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்பந்தம் கத்தார் தலைநகர் தோஹாவில் எட்டப்பட்டு உள்ளது. 

முன்னதாக, போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தப் பணியில் அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் ஈடுபட்டு வந்தன. 

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது மூலம் 15 மாதங்களாக நடந்துவந்த காசாபோர் முடிவுக்கு வந்துள்ளது. காசாவிலிருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்… 15 மாத போரை 96 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வந்த டிரம்ப் கண்மூடித்தனமாக நம்பும் நபர்..!

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காசாவில் இருந்து பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டது. பிணைக் கைதிகள் (உயிருடன் இருப்போர், இறந்தோர்) திரும்புதலை உறுதி செய்தல் உள்ளிட்ட போர் இலக்குகள் அனைத்திலும் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. 

இந்த ஒப்பந்தம் மூலம் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.” என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் போர் நிறுத்தத்திற்கு  தீவிர வலது சாரி கூட்டணியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக பாதுகாப்பு அமைச்சரும் அச்சுறுத்தி இருந்தார். 

ஹமாஸை முழுமையாக அழித்தொழிக்கும் வரை நெதன்யாகு போர் நிறுத்தத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் அந்தஅமைப்பினர் முழங்கி வந்தனர்.

இருப்பினும் அத்தனை எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு பிரதமர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

போரின் பின்னணி
 
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண் மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

 இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில், காசாவில் 46,700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் 
 சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருந்தது. 

23 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடரும் தாக்குதல்கள்

 இதற்கிடையில் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க வியாழனன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் காசாவில் 72 பேர் கொல்லப்பட்டனர். கடைசி நேரத்தில் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாமதம் காட்டியதாகவும் இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு வாரம் இரு தரப்பினரும் ‘அமைதியாக’ இருக்க வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சூழலில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது காசா மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. காசா மக்கள் மட்டுமல்ல இஸ்ரேல், அமெரிக்கா எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஆதரவைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்… 15 மாத போரை 96 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வந்த டிரம்ப் கண்மூடித்தனமாக நம்பும் நபர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share