பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார்; 'முற்றும் துறந்தும்' சினிமா ஆசை விடவில்லை
மும்பை நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி. அவர் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க துறவறம் மேற்கொண்டார்.
90களில் பாலிவுட் மட்டுமின்றி தென்னக திரையுலகிலும் கொடிகட்டி பறந்தவர் இவர். நிழல் உலக தாதாக்கள் உடன் இருந்த தொடர்பு பற்றிய சர்ச்சை எழுந்ததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் வெளிநாடுகளிலேயே தங்கி இருந்தார்.
இதைத் தொடர்ந்து மெல்ல மெல்ல திரைப்படங்களில் நடிப்பதிலிருந்தும் விலகியவர், 2012-ல் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு வந்திருந்தார். இதையடுத்து ஆன்மிக பாதையில் அவருக்கு ஈடுபாடு எழுந்தது.
மேலும், இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்திலும் அவர் அவ்வப்போது பதிவுகளையும் இட்டு வந்தார். இதனிடையே, தனது கடைசி பதிவில் அவர், நீண்ட ருடங்களுக்கு பிறகு தாய்நாடான இந்தியா வருவதாகத் தெரிவித்திருந்தார்.மேலும், பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கும் சென்று முழுமையானத் துறவறம் மேற்கொள்ளப் போவதாகவும் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: அச்சத்தில் பாலிவுட் திரையுலகம்: சயீப் அலிகான் கத்திக்குத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து பிரபலங்களுக்கு கொலை மிரட்டல்
இதன்படி அவர் நேற்று முன்தினம் மகா கும்பமேளாவின் செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடாவுக்கு வந்தார். அதன் தலைவரான ஆச்சார்யா டாக்டர் லஷ்மி நாராயண் திரிபாதியிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவரிடம் தனக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும், முழுத்துறவறம் மேற்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்தார். இதற்கான நிபந்தனைகளையும் நடிகை மம்தா குல்கர்னி ஏற்றார்.
இதற்காக மம்தா, இறந்தபின் அவர்களது குடும்பத்தார் செய்யும் பிண்டதானச் சடங்கை அவர் தனக்குத் தானே செய்து கொண்டார். தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனிதக் குளியலை முடித்தவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும் முறைகள் துவங்கின. இதை கின்னர் அகாடாவுக்காக ஜுனா அகாடாவினர் செய்து வைத்தனர்.
நேற்று முன்தினம் மாலை முடிந்த நிகழ்ச்சியில் மம்தா குல்கர்னி, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசினார். பின்னர் அவருக்கு கின்னர் அகாடா சார்பில் மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின் மம்தாவுக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ருத்ராட்ச மாலைகள் அணிந்து காவி உடையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுவையில், "எனக்கு காளி மாதா இட்ட கட்டளையின்படி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன். முழுத்துறவறம் பூண்டதால் மகா மண்டலேஷ்வர் பதவி எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனது ரசிகர்கள் என்னை இண்டும் பாலிவுட்டுக்குத் திரும்பும்படி வலியுறுத்துகின்றனர். ஆனால், இதை ஏற்கப் போவதில்லை. மகா காளி உத்தரவின்றி எதுவும் நிகழாது"என்று. அவர் தெரிவித்தார்.
பாலிவுட் நடிகைகளில் முதலாவதாகத் துறவறம் பூண்டவராக மம்தா குல்கர்னி கருதப்படுகிறார். துறவறம் ஏற்ற பின்னர், கின்னர் அகாடாவின் மதுரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்கப் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தன் நடிப்பை தொடர தடையில்லை எனக் கூறும் கின்னர் அகாடா, இனி மம்தா ஆன்மிகத் திரைப்பாடங்களில் மட்டுமே நடிக்கலாம் என அனுமதி வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: முழு வீச்சில் களத்தில் குதித்த மும்பை போலீஸ்..! சையீப் அலிகானை குத்தியவனை ஒரே நாளில் பிடிக்க தேடுதல் வேட்டை..