திமுக எம்எல்ஏ-வை விடுதலை செய்தது செல்லாது... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக தற்போது பதவி வகிக்கும் பழனியாண்டிக்கு சொந்தமான கரூரில் கல் உடைக்கும் ஆலை உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த விபத்தில், பாலசுப்பிரமணியன் என்ற தொழிலாளி மரணமடைந்தார்.
இதுசம்பந்தமாக வெளியான செய்தியின் அடிப்படையில் ஆலையில் ஆய்வு செய்த, திருச்சி தொழில் பாதுகாப்பு துறை துணை இயக்குனர், பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, பழனியாண்டிக்கு எதிராக கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: தமிழக குழந்தைகள் மீதான யுத்தம்... முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்...!
இந்த வழக்கை விசாரித்த கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், வழக்கில் இருந்து பழனியாண்டியை விடுதலை செய்தது. அதை கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி திருச்சி தொழில் பாதுகாப்பு துறை துணை இயக்குனர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாததால் தான் தொழிலாளி பலியாகியுள்ளார் என்பது சக தொழிலாளர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெளிவாவதாகக் கூறி, வழக்கில் இருந்து பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் வழக்கை மீண்டும் விசாரித்து சட்டபப்டி தீர்ப்பளிக்கும்படி, கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மறு ஆய்வு மனுவை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: முதல்ல மிஸ்டுகால் குடுத்து ஆள் சேர்த்தாங்க இப்ப பிஸ்கட்... நக்கலடித்த உதயநிதி!