"பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம் பெறவில்லை" : தயாநிதிமாறன் சாடல்
பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம் பெறவில்லை
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையை கூட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை என்று, திமுக எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்து இருக்கிறார்.
மத்தியபட்ஜெட்டில் மிக முக்கியமாக, தனிநபர் வருமான வரி உச்சவரம்பை ரூ. 12 லட்சமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார்.
சுமார் 1.15 மணிநேரம் உரையாற்றிய நிதியமைச்சர், ’வானோக்கி வாழும் உலகெல்லாம்’ என்ற செங்கோன்மை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறளை மேற்கோள்காட்டி பேசினார்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் தொல்லை... அதிமுக மட்டும் ஆட்சிக்கு வந்தால்... திமுகவை தெறிக்கவிட்ட செல்லூர் ராஜு!
இந்த நிலையில், பட்ஜெட் உரை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பிதயாநிதி மாறன் கூறியதாவது:-
"மிகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்தது. பிப். 5 ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி வாக்காளர்களை குறிவைத்து தேர்தலுக்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட் போல் தெரிகிறது.
ரூ. 12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பின்னர், 8 - 12 லட்சம் வரை 10 சதவிகிதம் வரி வரம்பு எனத் தெரிவித்துள்ளார். இது, மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிமையானதாகவும் நேரடியாகவும் அறிவிப்பை வெளியிடவில்லை.
நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் நிதியமைச்சரால் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டு பீகார் தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநிலத்துக்கு மட்டும் உள்கட்டமைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அல்லது வேறெந்த தென் மாநிலங்கள் குறித்தும் ஒரு வார்த்தைகூட உரையில் இல்லை"என்று கூறினார்.
"பட்ஜெட்டில் பல புதிய முன்மொழிவுகள் உள்ளன. ஆனால் அவை என்ன ஆகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.
இதையும் படிங்க: பாஜகவின் பம்மாத்து நாடகம் - மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஸ்டாலின்!