திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் சேவகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோட்டச் செயலாளர் அரசப்பாண்டியன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்று பேசினார். “தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தாலிபான் அரசுக்கும், இந்து விரோத தீய அரசுக்கும் நான் ஒன்றை சொல்கிறேன், இப்படித்தான் உத்தரப் பிரசேதத்திலும் நடைபெற்றது. அதனால் உத்தரப் பிரசேத்தில் எதிரிகள் ஆட்சிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஏற்படும்.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம்தான். இதை பங்கு போட அலையும் இந்து விரோத தீயக்கூட்டத்தை எச்சரிக்கிறேன். திருப்பரங்குன்றத்தில் முதலில் வந்தது முருகன் கோயிலா, தர்காவா? இப்போது ஏன் பிரச்சினை வருகிறது? தமிழகத்தில் திமுக ஆட்சி வரும்போதெல்லாம் இந்து மக்களுக்கு எதிரான நிர்வாகம் நடைபெறுகிறது. இதை யாரும் மறக்கக் கூடாது. முன்னெச்சரிக்கையாக நம்மை கைது செய்த போது போலீஸார் பயன்படுத்திய வார்த்தைகளைப் பதிவு செய்து, அவர்கள் மீது போலீஸில் புகாரளிக்க வேண்டும்.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சென்னை, காரைக்குடி, திருப்பூருக்கு எப்படி செல்லுபடியாகும். மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் அந்த மாவட்டத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும்.
அப்படியிருக்கும் போது எங்களை கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த போலீஸாரை நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டியது நம்முடைய கடமை. நவாஸ்கனியைப் பார்த்தால் போலீஸாரின் கால்கள் நடுங்குகின்றன. ஏனெனில் நவாஸ்கனியின் கைக்கூலிகள்தான் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளனர். அரசு ஆவணங்களில் சிக்கந்தர் சமாதி மதுரை கோரிப்பாளையத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருப்பது போலி தானே? முருகனின் அறுபடை வீட்டை அபகரிக்கும் திட்டம் தானே?

இந்நேரத்தில் இந்துக்கள் நாம் ஒன்றாகாமல் இருந்தால் தமிழ் கடவுள் முருகனை தரித்திரனாக்கவிடுவார்கள். முதல் படை வீட்டை கூறுபோட யாருக்கு உரிமை உள்ளது? இந்துக்களை வம்புக்கு இழுக்க நவாஸ்கனி ஆடு, கோழியுடன் மலைக்கு மேல் சென்றுள்ளார். இதை முளையிலேயே கிள்ளி எரியாவிட்டால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியது வரும். நீதிமன்றத்தில் தமிழக அரசு அயோத்தி போல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இதுதான்ஆரம்பம். அயோத்தி யுத்தம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது” என்று எச்.ராஜா பேசினார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மிரட்டும் கடல் அரிப்பு.. ஆய்வுக்காக படையெடுத்த விஞ்ஞானிகள்
இதையும் படிங்க: உங்கள் நாடகங்கள் விரைவில் அம்பலமாகும்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுக்கும் மத்திய இணையமைச்சர் எல். முருகன்.!