ராஜ்கோட்டில் 3வது டி20: சிம்மசொப்பனமான இந்தியாவின் சுழற்பந்துவீச்சு: சமாளிக்குமா இங்கிலாந்து?
ராஜ்கோட்டில் இன்று நடக்கும் 3வது டி20 ஆட்டம்
ராஜ்கோட்டில் இன்று நடக்கும் 3வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றும் முயற்சியில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால், 3-0 என தொடரைக் கைப்பற்றும்.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை 2019ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின், அந்த அணியால் வெள்ளைப் பந்தில் நடக்கும் ஆட்டங்களில் பெரிதாக வெற்றியை குவிக்க முடியவில்லை.
ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையிலும், 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி மோசமாகவே செயல்பட்டது. டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக வந்த பிரண்டென் மெக்கலம் ஒருநாள், டி20க்கும் சேர்த்து பணியைக் கவனித்தபோதிலும் இவரின் பேஸ்பால் பயிற்சி முறை பெரிதாக ஒத்துழைக்கவில்லை.
இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நீண்ட கால இடைவெளிக்குப்பின் பின் வந்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சும் பெரிதாக பலன் அளிக்கவில்லை.மார்க் உட் பந்துவீச்சில் வேகம் இருக்கிறதேத் தவிர லைன் லென்த் இல்லை. பேட்டிங்கிலும் ஆல்ரவுண்டர்களையும், ஸ்பெசலிஸ்ட் பேட்டர்களை வைத்திருந்தாலும் இரு ஆட்டங்களிலும் பெரிதாக எந்த பேட்டரும் ரன் சேர்க்கவில்லை.
இந்தியாவின் சுழற்பந்துவீச்சுப் படையைப் பார்த்து இங்கிலாந்து பேட்டர்கள் எப்படிஆடுவது எனத் தெரியாமல் விக்கெட்டை இழக்கிறார்கள். அதிலும் வருண் பந்துவீச்சில் கூக்ளி பந்துவீச்சை கண்டு ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்திய அணியைப் பொருத்தவரை கடந்த இரு போட்டிகளிலும் திலக் வர்மா, அபிஷேக் சர்மா இருவரின் ஆட்டம்தான் அணிக்கு வெற்றிதேடித்தந்துள்ளது. மற்றவகையில் சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் என யாரும் தங்களின் பங்களிப்பை முழுமையாக வழங்கவில்லை.
அதிலும் கேப்டன் சூர்யகுமார் கடந்த 5 இன்னிங்ஸ்களிலும் அதிகபட்சமாக 20 ரன்களைக்கூட தாண்டாமல் பேட் செய்து வருகிறார். ஃபார்மின்றி தவிக்கிறாரா அல்லது கேப்டன் சுமையால் விளையாடமுடியாமல் திணறுகிறாராஎனத் தெரியவில்லை.
ஆனால் இதே ராஜ்கோட் மைதானத்தில்தான் கடந்த 2023ம்ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக சூர்யகுமார் சதம் விளாசினார். அதே நினைவுகளுடன் இந்த ஆட்டத்திலும் விளையாடி பெரிய ஸ்கோரை எட்டினால் வெற்றி நிச்சயம். இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த ஆட்டத்தில் துருவ் ஜூரெல் சிறப்பாக ஆடாததால் இன்றைய ஆட்டத்தில் ஷிவம் துபேவுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் பெரிதாக வேலையிருக்காது என்பதால் அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா இருவருடன் மட்டும்தான் இந்திய அணி களமிறங்கும். அதேசமயம், அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவரத்தி ஆகிய4 சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இடம் உறுதியாகும். ஷிவம் துபே இடம் பெற்றால், 7-வது பந்துவீச்சாளராக பந்துவீசலாம், அபிஷேக் சர்மாவும் பந்துவீசினாலும் வியப்பில்லை.
இதையும் படிங்க: ஹீரோவான திலக் வர்மா! கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி: வெற்றியை கோட்டைவிட்ட இங்கிலாந்து
ராஜ்கோட் நிரஞ்சன் மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. கடினமான, தட்டையான பிட்சை கொண்டுள்ள இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்ய படாதபாடு படவேண்டும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்கும், ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களுக்கு விருந்தாக இந்த ஆடுகளம் இருக்கும். இந்த ஆடுகளத்தில் குறைந்தபட்ச ஸ்கோரே 189 ரன்கள்தான். அதிகபட்சமாக228 ரன்கள்வரை சேர்க்கப்பட்டுள்ளது. ஆதலால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து பெரிய ஸ்கோரை அடித்துக்கொள்வது பாதுகாப்பானது. இரவுநேர பனிப்பொழிவுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். இந்த மைதானத்தில்இந்திய அணி இதுவரை 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 4 போட்டிகளில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்து அணி(உத்தேசம்)
பில்சால்ட்(விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜாஸ் பட்லர்(கேப்டன்), ஹேரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தெல் அல்லது ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன் அல்லது பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் உட்
இந்திய அணி(உத்தேசம்)
சஞ்சு சாம்ஸன்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், ஷிவம் துபே அல்லது வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கத்தில் டி20: இங்கிலாந்து பேட்டர்களை கலங்கடிப்பார்களா இந்திய ஸ்பின்னர்கள்