கடந்த சில ஆண்டுகளில் நடிகர் விஷாலுக்கு 'மார்க் ஆண்டனி' படம் தவிர்த்து மற்ற படங்கள் பெரிதாக ஓடவில்லை. எனவே, ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நடிகர் விஷால் இருந்து வருகிறார். இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் கூட்டணியில் 'மதகஜராஜா' வெளியாகியுள்ளது. பல்வேறு தடைகளைக் கடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் திரைக்கு வந்துள்ளது. மேலும் இப்படம் மற்ற படங்களைக் காட்டிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரவேற்பு படக்குழுவினரை திக்குமுக்காட வைத்துள்ளது.
இந்நிலையில் 'மதகஜராஜா' படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "‘மதகஜராஜா’ திரையரங்குகளில் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளது. என்ன ஒரு வரவேற்பு, இதற்கு மேல் என்ன தேவை. அனைத்து திரையரங்குகளிலும் பெரும் வரவேற்பு. திரையரங்கம் முழுக்க கூட்டத்தைப் பார்ப்பது ஒரு நடிகரை இன்னும் கடினமாக உழைக்க வைக்கிறது.
என் அன்பான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. குடும்பமாக ஒரு படத்தைப் பார்க்க வருவது ஒரு நேர்மறையான விஷயம். நன்றி சுந்தர் சார். இந்த தருணத்துக்காக ஒவ்வொரு வருடமும் காத்திருந்தேன். சோழ பரம்பரையில் இன்னொரு எம்.எல்.ஏ. 12 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் வெளியாகி இவ்வளவு வரவேற்பைப் பெறுவது ஓர் அதிசயம்தான்.” என்று தெரிவித்துள்ளார் விஷால். ‘மதகஜராஜா’ படத்தைத் தொடர்ந்து, விஷால் தயாரித்து இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.
இதையும் படிங்க: சந்தானத்தை மீண்டும் காமெடியனா பார்க்கணும்.. சுந்தர்.சிக்கு வந்த ஆசை!
இதையும் படிங்க: சந்தானத்தை மீண்டும் காமெடியனா பார்க்கணும்.. சுந்தர்.சிக்கு வந்த ஆசை!