வரும் ஜுலை மாதத்தில் தமிழகத்தில் 6 பேருடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிவடைகிறது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பதவிக் காலமும் அடங்கும். விரைவில் அவருடைய பதவி முடிவடைய உள்ள நிலையில், அன்புமணி மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகும் வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அன்புமணியின் மாநிலங்களவை பதவிக் காலம் முடிவடைவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி, இதுபற்றி ஏதும் கோரிக்கை வைத்துள்ளீர்களா என ராமதாஸிடம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ராமதாஸ், “அந்த யோசனையை இப்போதுதான் சொல்கிறீர்கள். வைக்கலாம் போலிருக்கிறதே. நீங்கள் கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்களேன்” என்று செய்தியாளரிடம் திருப்பி ராமதாஸ் கேட்டார். யாரிடம் சிபாரிசு செய்யவேண்டும் எனச் செய்தியாளர்கள் திருப்பி கேட்டதற்கு, “அதை ரகசியமாக கேளுங்கள் சொல்கிறேன், திமுகவிடம் கேட்க மாட்டோம். திமுகவிடம் கேட்கமாட்டோம்” என்று ராமதாஸ் கூறினார்.
இதையும் படிங்க: எனக்கு 8 மொழிகள் தெரியும், குழந்தைகளால் பலமொழிகளைக் கற்கமுடியும்.. மும்மொழி கொள்கைக்கு சுதா மூர்த்தி ஆதரவு..!
மேலும் ராமதாஸ் கூறுகையில், “திமுக அரசு இந்த ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட்டை வெளியிட உள்ளது. எராளமான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனக் கூறுகிறார்கள். இந்த ஆட்சியில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை. புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. அரசு கல்லூரிகளால் 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சொன்னதும் நடக்கவில்லை. சத்தீஸ்கர், ஒடிசா வரிசையில் தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை ரூ 3500 ஆக உயர்த்த வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

சென்னையில் 22-ஆம் தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்துக்கு 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். கர்நாடக துணை முதல்வரை தமிழக அரசு சார்பில் நேரில் சென்று அழைத்துள்ளனர். கர்நாடக அரசின் பட்ஜெட்டில் மேகேதாட்டு அணை கட்ட ஆயத்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தமிழகத்துக்கு அழைக்கக் கூடாது என்று வெளியிட்டேன். ஆனால், கர்நாடகாவை அழைத்து காவிரி பாசன விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் துரோகம் செய்கிறார். புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 உயர்த்தியிருப்பது வரவேற்கதக்கது. தமிழகத்தில் இத்தொகையை ரூ 2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

தமிழர்கள் நாகரிகமானவர்கள் என்பது பற்றிய புத்தகங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை அடித்து பொதுமக்கள் நொறுக்கியுள்ளனர். அவர்களுக்குப் பாராட்டுகள்” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு..!