திண்டிவனத்தில் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும். கடந்த 3 மாதங்களில் 147 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 19 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்னகவே 20 மீனவர்கள் இலங்கை சிறையில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இந்தியப் பிரதமர் இலங்கை சென்று அந்நாட்டு பிரதமரைச் சந்தித்து பேசும்போது கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை அதிபரிடம் வலியிறுத்தி பேச வேண்டும். ராமேஸ்வரம் வரும்போது நல்ல செய்தியை பிரதமர் தெரிவிக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
83 அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக சித்த நூல்களை ஆயுர்வேத நூலாக ஆயுஷ் மாற்றியுள்ளது. இதன் மூலம் சித்த மருத்துவத்தை கண்டுபிடித்தவர்கள் வட இந்தியர்கள் எனச் சொல்லும் வாய்ப்புள்ளது. எனவே மே 7ம் தேதிக்கு முன்பாகத் தமிழக அரசு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்.
'எம்புரான்' மலையாளப் படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும்.
இதையும் படிங்க: 18 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்..? ஓட்டுக்காக திமுகவின் கபட நாடகம்- சீமான் ஆவேசம்..!

தமிழகத்தில் தொடர் என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடப்பதன் மூலம் குற்றங்கள் பெருகி வருவது தெரிகிறது. வக்பு வாரிய திருத்த சட்டத்தை பாமக ஆதரிக்கவில்லை. அதனால்தான் தமிழக அரசின் தீர்மானத்தை பாமக உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக சொன்ன முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது" என்று ராமதாஸ் கூறினார்.
இதையும் படிங்க: விஜயை எதிர்த்து தேர்தலில் போட்டி: ‘புலி’படத் தயாரிப்பாளரை களமிறக்கும் திமுக..?