தமிழகத்தில் நேற்று இரவு மட்டும் வெவ்வேறு இரங்களில் இரட்டை கொலை சம்பவம் நடந்துள்ளது. இரண்டு கொலை சம்பவங்களிலும் இரண்டு முதியவர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஓசூர் அருகே ஒன்னல்வாடி கிராமத்தில் நடந்த கொலை சம்பவத்தில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவரும், அவரது உறவினரான 60 வயது மூதாட்டியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கொலை செய்தது மட்டுமல்லாமல், வீட்டிற்கும் அந்த கொலைகார கும்பல் தீ வைத்துவிட்டு தப்பித்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வீட்டில் தனியாக இருந்த வயது முதிர்ந்த தம்பதி வெட்டி படுகொலை செய்யபப்ட்ட சம்பவமும் அரங்கேறியது. அடுத்தடுத்த இரட்டை கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவினாசி இரட்டை கொலை சம்பவத்தில் கொலை குற்றவாளியான அவர்களது உறவினர் ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனினும் தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: லண்டனில் அண்ணாமலை எந்த மொழியில் பேசினார்? - வறுத்தெடுத்த அமைச்சர்கள்!!

இதுகுறித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. திமுக அரசினால் கைகள் கட்டப்பட்டுள்ள காவல்துறை மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள். சேமலைகவுண்டம் பாளையம் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இது தான் உங்க இருமொழி கொள்கையா..? பிடிஆர்-ஐ கிழித்தெடுத்த அண்ணாமலை..!