காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன். இவரது மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. படப்பை குணா மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

படப்பை குணா மீதான 48 வழக்குகளில் 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார் குணா.
இதையும் படிங்க: Breaking News: A+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி- பாஜக பிரமுகர், பிரபல ரவுடி படப்பை குணா கைது..!

தொடர்ந்து படப்பை குணா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் வழக்குகளில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பை குணா வெளியில் இருந்து வந்தார். இந்நிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை மிரட்டியதோடு, அவரை தாக்கியதாக குணா மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில் ரவுடி படப்பை குணா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ஏற்கனவே 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள படப்பை குணா தற்போது 5வது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!