மும்மொழிக் கொள்கையில் தோற்றுவிட்டதை மடைமாற்றவே தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் அவருடடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என முதல்வருக்கு யாரோ கூறியுள்ளனர். அது யார் என்று எனக்கு தெரியாது.

மக்களவையில் 543 இடங்கள் உள்ளன. அந்த எண்ணிக்கையை 800-க்கும் மேல் அதிகரிக்கும் என்றும், தமிழகத்துக்கு 22 இடங்கள் கிடைக்க வேண்டும், ஆனால் 10 இடங்கள்தான் கிடைக்கும் என யாரோ கூறியுள்ளார். மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு என எங்கும் கூறாத நிலையில், எந்த அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசியுள்ளார் என்று தெரியவில்லை. மக்களவைத் தேர்தலின்போது ஏற்கனவே இது தொடர்பாக காங்கிரஸ் புரளி கிளப்புகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
தற்போது தமிழக அரசு மும்மொழி கொள்கையில் தோற்றுவிட்டது. அதை மடைமாற்றவே சங்கரன்கோயிலில் இந்திக்குப் பதில் ஆங்கிலத்தை கருப்பு மை கொண்டு திமுகவினர் மறைத்துள்ளனர். எனவே, தோல்வியை மடைமாற்றவே தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

முதல்வர் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. 2001இல் தொகுதி மறுசீரமைப்பை அன்றைய பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். யாருக்கும் பிரச்சினை ஏற்படக் கூடாது என ஒத்திவைத்தார். தொகுதி மறுசீரமைப்பைத் தவிர்க்க முடியாது. தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் செயல்படுத்த வேண்டியது எங்கள் பொறுப்பு. முதல்வர் ஸ்டாலின் தனக்கு தொகுதி மறுசீரமைப்பு குறித்து யார் தகவல் கூறியது எனத் தெரிவித்தால் மட்டுமே அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும்" என்று அண்ணாமலை தெரிவித்தார்
இதையும் படிங்க: அடுத்து திமுகவா, தவெகவா..? பாஜகவிலிருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் அதிரடி சரவெடி முடிவு..!