தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (சென்னை மாவட்டம்), விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் நெல்லை ஆகிய அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்படுகின்றன. இந்த போக்குவரத்து கழகங்களின் கீழாக மொத்தம் 25 மண்டலம் வாரியாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த 8 அரசு போக்குவரத்து கழகங்களில் இருக்கும் 3,274 ஒட்டுநர் உடன் கொண்ட நடத்துநர் காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது காலி பணியிடங்களில் முழு விவரங்களை பார்க்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 364 பணியிடங்களும்,மாநில அரசு விரைவு போக்குவரத்து (தமிழ்நாடு) கழகத்தில் 318 பணியிடங்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (விழுப்புரம்) 322 பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில்... குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!!

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (கும்பகோணம்) 756 பணியிடங்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (சேலம்) 486 பணியிடங்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (கோயம்புத்தூர்) 344 பணியிடங்களும் காலியாக உள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) 322 பணியிடங்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) 362 பணியிடங்களும் என மொத்தம் 3,274 ஓட்டுநர் உடன் கொண்ட நடத்துநர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும்., அதிகபடியாக ஓசி பிரிவை சேர்ந்தவர்கள் 40 வயதைக் கடந்திருக்கக்கூடாது. பிசி, எம்பிசி, டிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் 45 வயதைக் கடந்திருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ( ஓசி பிரிவை சேர்ந்தவர்கள்) அதிகபடியாக 50 வயதைக் கடந்திருக்கக்கூடாது என்றும் பிசி, எம்பிசி, டிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 55 வயதைக் கடந்திருக்கக்கூடாது எனவும் தமிழில் எழுதப் படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும், கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்., முதலுதவி சான்றிதழ், பேட்ஜ் மற்றும் நடத்துநர் லைசன்ஸ் ஆகியவை 2025 ஜனவரி அல்லது அதற்கு முன்னதாக பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் வயது 24 மற்றும் 18 மாத அனுபவம் தேவை என்ற நெறிமுறை பொருந்தாது என்று விளக்கமளித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு..!