விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் பகுதியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனிடம், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'100 நாள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் பல இடங்களில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பாலவந்தம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் 'கிராம சபை கூட்டம் நடப்பதாக பெண்களை அழைத்து வந்து, அந்த கூட்டத்தை அப்படியே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என மாற்றி விட்டு உள்ளீர்கள்' என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எங்களுக்கு போட்டி யாரும் இல்ல..! 2026ல் திமுக தான்.. அமைச்சர் பெரியசாமி நம்பிக்கை..!

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த மீனா என்ற அந்த பெண் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடன் உடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் 'கிராம சபை கூட்டம் நடக்குதுன்னு சொன்னாங்க. கிராம சபை கூட்டத்தை நீங்கள் ஆர்ப்பாட்டம் என போட்டு விட்டீர்கள் இது முதல் தவறு. கிராம சபை கூட்டத்தை ஏன் ஆர்ப்பாட்டமாக மாற்றினீர்கள்? கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்' எனப் பேச, அமைச்சர் ராமச்சந்திரன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்தளப்பதிவில், ''இன்றைய தினம், விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர் திரு. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். அங்கிருந்த
பாஜக அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா அவர்கள் இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார் அமைச்சர்.

கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.
தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பல முறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் தவெக vs திமுகவிற்கும்தான் போட்டி: விஜய் பேச்சுக்கு இ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்.!