தமிழக பாஜக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வானார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து சென்னை வானகரத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் அவர் தலைவராக பதவியேற்று கொண்டார்.அவருக்கு முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்து, இனிப்பு வழங்கினார். அப்போது நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேடையில் இருந்த தலைவர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

இந்த நிலையில் புதிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக பாஜக தலைவர் என்ற பொறுப்பை வழங்கிய கட்சி தலைமைக்கும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047-இன் கீழ் நமது தமிழகத்தின் வலுவான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை வாரி வழங்கி வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது உள்ளத்தில் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் சிறப்பிடம் கொடுத்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நயினார் கேட்டுக்கொண்டதால் மனமிறங்கிய அண்ணாமலை... காற்றில் பறக்கவிடப்பட்ட சபதம்!!

பாராளுமன்றத்தில் தமிழரின் அடையாளமான செங்கோலை நிறுவியது, நமது தமிழ் சமூகத்தின் பழம்பெருமை வாய்ந்த ஆன்மீக பாரம்பரிய பிணைப்புகளைக் கொண்டாடும் வகையில் "காசி தமிழ் சங்கமம்" என்ற கலாச்சார நிகழ்வை அறிமுகப்படுத்தியது, உலக அரங்குகளில் நமது தொன்மை வாய்ந்த தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி உரையாற்றுவது என அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு நமது தமிழ் மொழியை நெஞ்சார நேசிக்கும் ஒரு உன்னத தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என தெரிவித்துள்ளார்.

பிரதமரின் எல்லையில்லா கனவுகளுக்காகவும், நமது கட்சித் தொண்டர்களின் நலனுக்காகவும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அயராது உழைப்பேன் என உளமார உறுதி அளிப்பதாகவும்,
நம் உயரிய சித்தாந்தத்திற்காகவும், நமது புனித பாரத மண்ணையும் மக்களையும் காப்பதற்காகவும், எத்தனையோ கடுமையான சவால்களை சந்தித்து உயிர் தியாகம் செய்த எண்ணற்ற புனித ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது தியாகம் என்றும் வீணாகாது என்று சபதமிட்டு தனது பொறுப்பினை ஏற்க விரும்புவதாகவும் கூறினார்.

மக்கள் விரோத திமுக ஆட்சியினால் தமிழகத்தை கொடிய கருமேகங்கள் சூழ்ந்திருக்கிறது., தமிழக பெண்களைப் பாதுகாக்கத் தவறிய கையாலாகாத அரசை, நமது பிள்ளைகள் நற்கல்வி கிடைத்து அவர்கள் முன்னேறி விடக்கூடாது என துடிக்கும் இந்த கேவல அரசை, ஊற்றிக்கொடுத்து பல அப்பாவிக் குடும்பங்களுக்கு உலை வைக்கும் இந்த உதவாக்கரை அரசை, ஊழலில் கொழுத்துப் போய் கொள்ளையடிக்கும் இந்த திருட்டு மாடல் அரசை, திக்கெட்டும் புகழ் ஒளி வீசிய நமது தமிழகத்தை இருளின் தள்ளிய இந்த கொடிய திமுக அரசை அதிகாரத்திலிருந்து துரத்தியடிப்போம் என தனது அறிக்கையில் கூறியுள்ளார். மக்கள் பணியே மகேசன் பணி என்ற தெய்வீகக் குறிக்கோளை உந்துசக்தியாகக் கொண்டு அயராது உழைப்போம் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு கொடுத்த பாஜக... இனி அவரோட கண்ட்ரோலில் தென் மாநிலங்கள்!!