துணை முதல்வர் பதவி குறித்து தன்னிடம் பேசியதை தான் அதிமுக தற்போது தவெகவிடம் பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மாநில தன்னாட்சி பேசுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ்; எதிர்த்து போராடியது தமிழ்நாடு. இந்தி மொழியை திணித்தவனுடன் கூட்டணி வைத்தது திராவிட கட்சிகள்; மாநில உரிமைகளை பறித்த போது ஆட்சியில் இருந்தவர்களும் இவர்கள்தான். இந்த கட்சிகள்தான் இன்று தனித்த குணம், தன்னாட்சி என்று பேசுகின்றன.

டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இவ்வளவு நாள் அப்படி இருந்துள்ளதா? பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அவுண்ட் ஆப் கண்ட்ரோல் என பேச முடியாது. அண்டர் தி கண்ட்ரோல் என்பதுதான் சரி.
இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனல்... இதுதான் பிரச்சினை... உடைத்துப்பேசிய சீமான்..!

தேர்தல் கூட்டணி வேறு; ஆட்சிக்கான கூட்டணி வேறு என்று நான் எப்போதும் கூறவே இல்லை. 2006-ம் ஆண்டு தேர்தலைப் போல, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வரும் போது நாம் தமிழர் கட்சியின் முடிவு குறித்து அப்போது தெரிவிப்போம். நாங்கள் ஆட்சி மாற்றம்- ஆள் மாற்றத்துக்கானவர்கள் அல்ல. அடிப்படையையே மாற்றுகிறவர்கள். கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல. அந்த கட்டிடத்தையே இடித்துவிட்டு புதியதாக கட்டுகிறவன் நான்.

அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் 90 தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்டதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். இதனையே என்னிடமும் அதிமுக பேசியது. துணை முதல்வர் பதவி தரமாட்டேன் என அதிமுக சொல்லி இருக்காது. இரு கட்சிகளுக்கும் ஒத்துவராத சூழ்நிலையால் கூட்டணி அமையாமல் பிரிந்திருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி போல பொரணி பேசிக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீட் வேணும் என்றால் விஜய் கட்சிக்கு செல்லுங்கள்... நானே சேர்த்து விடுகிறேன் - சீமானின் பரபரப்பு ஆடியோ...!