திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70) இவருடைய மனைவி கனகா (வயது 65). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் மற்றும் அவரின் மனைவி வசந்தியுடன், பெற்றோர் வீட்டின் அருகே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் வயது முதிர்ந்த தம்பதியினர் தனியாக வசித்து வருவதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.அப்போது வெளியே வந்த மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி கட்டையால் சர மரியாக தாக்கி உள்ளனர். வலி தாங்காமல் கனகா கத்தி கூச்சலிடவே, அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனை அறிந்த அவருடைய மகன் ஆறுமுகம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். எனவே ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் மிளகாய் பொடி தூவி நான்கு சவரன் தங்க நகை பறித்துச் சென்ற சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக கனகாவின் மருமகளான வசந்தியிடம் ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது போலீசார் விசாரணையில் வசந்தி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார் சந்தேகம் அடைந்த போலீசார் வசந்தியை ஜோலார்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: டாக்டர் வேடத்தில் கொள்ளை.. கறவை மாடு திருடியவர்களுக்கு அடி, உதை..!

பின்னர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாமியார் கனகா மற்றும் மருமகள் வசந்திக்கும் இடையே அடிக்கடி மாமியார் மருமகளுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எப்படியாவது மாமியாரை பழி வாங்க வேண்டும் என மருமகள் வசந்தி திட்டம் தீட்டியுள்ளார்.
வசந்தியின் மாமன் மகனான மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் மைக்கல்ராஜ் (வயது 21) கூலி வேலை செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி அன்று நள்ளிரவு மைக்கல்ராஜ் கனகா வீட்டிற்கு சென்று மிளகாய் பொடி தூவி கட்டையால் அடித்து 4 சவரன் தங்க நகையை பறித்து சென்றது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

மேலும் மூதாட்டி கனகாவிடம் பறித்து சென்ற 4சவரன் தங்க நகையும் ஜோலார்பேட்டை போலீசார் மைக்கல்ராஜிடம் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீசார் வசந்தி மற்றும் மைக்கல்ராஜை கைது செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாமியாரை பழிவாங்க மருமகளே, உறவுக்கார இளைஞர் ஒருவரை செட்டப் செய்து, முகத்தில் மிளகாய் பொடி தூவி, கட்டையால் அடிக்க வைத்து செயின் பறிப்பிலும் ஈடுபட வைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன்.. துபாயில் இருந்தபடியே தீர்த்துக்கட்டிய மனைவி.. கம்பி எண்ணும் கள்ளக்காதலன்..!