திடீர் பயணமாக டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து 2 மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டார். இது முறிந்துபோன அதிமுக - பாஜக உறவை ஒட்ட வைப்பதற்கான முயற்சியாகவும், எதிர்வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி மீண்டும் உருவாவதற்கான வாய்ப்பாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று டெல்லியில் இருந்து சென்னை புறப்படும் முன்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு...
இதையும் படிங்க: அமித் ஷாவை சந்தித்தது இதற்குத் தான்! கூட்டணி குறித்து மனம் திறந்த இபிஎஸ்.. கொள்கை வேறு.. கூட்டணி வேறு..!
தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். மும்மொழிக் கொள்கையை திணிக்க கூடாது. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது; அப்படி மேற்கொண்டால் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும்.

மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களிலும் நடவடிக்கை கோரியும், தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முழுமையாக விசாரிக்க கோரியும் வலியுறுத்தினோம். தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள் பிரச்சினைகள் குறித்தும் அமித்ஷாவிடம் தெரிவித்தோம். அதிமுக அலுவலகத்தை பார்வையிடவே வந்தேன். நேரம் கிடைத்தால் அவரை பார்க்கலாம் என்று இருந்தோம். அதன்படி, நேரம் ஒதுக்கப்பட்டதும் 45 நிமிடம் ஒவ்வொரு பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்து அவரிடம் பேசினோம்.

கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனையை பேசுவதற்கு தான் அமித்ஷாவை சந்தித்தேன். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கை எப்போதும் நிலையாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படுவது, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும். தேர்தல் நேரத்தில் என்ன சூழ்நிலை இருக்குதோ, அதை பொறுத்தே கூட்டணி மாறும். கூட்டணி இருக்கு இல்லை என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காணும் கட்சி அதிமுக.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி முன்பிருக்கும் 2 ஆப்ஷன்... அமித் ஷா போட்ட கன்டிஷன்... ஏற்குமா அதிமுக?