கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். மேலும் தான் சேமித்து வைத்த பணத்தில் இருந்து அப்பகுதியில் புதிதாக வீடுகள் கட்டினார். வீடுகளை வாடகைக்கு விட முடிவு செய்த ராஜ்குமார், இந்த வீடுகளுக்கு 6 புதிய மின் இணைப்புகள் கேட்டு முறைப்படி மின் வாரியத்தில் விண்ணப்பித்தார். அதற்கு உண்டான கட்டணமும் செலுத்தி உள்ளார். இருந்தாலும் மின்வாரிய ஊழியர்கள், முறையாக மின் இணைப்பு வழங்காமல் இன்று, நாளை என இழுத்தடித்துள்ளனர். இது தொடர்பாக ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை பார்க்கும் ஹாரூன் என்பவரை சந்தித்த ராஜ்குமார், தனது வீட்டுக்கு மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

அதற்கு மின் இணைப்பு வழங்க ரூபாய் 18,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ஹாரூன் வலியுறுத்தியதாக தெரிகிறது. பணத்தை எடுத்து வைக்காமல் வேலை நடக்காது என்றும், 6 வீடுகளின் வாடகை வரும்பட்சத்தில் 18,000 ரூபாய் கொடுக்கலாம் தானே என நைசாகவும் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜ்குமார், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் செய்தார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், ரசாயணம் தடவிய நோட்டுகளை ராஜ்குமாரிடம் வழங்கினர். மேலும் லஞ்ச ஒழிப்பு காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திவ்யா மேற்பார்வையில் நேற்று மாலை மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு கட்டாய முத்தம்; இளைஞரை கொத்தாக தூக்கிய குனியமுத்தூர் காவல்துறை!

அப்பொழுது ராஜ்குமார் ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று போர்மேன் ஹாருணை சந்தித்தார். அவர் கேட்டபடியே ரூபாய் 18,000-த்தை கொடுத்தார். அவர் லஞ்சப் பணத்தை கேங்மேன் உதயகுமாரிடம் கொடுக்குமாறு அவர் தெரிவித்து உள்ளார். அதன்படி உதயகுமாரிடம் ராஜ்குமார் லஞ்சப் பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை அவர் வாங்கியதும் அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விரைந்து சென்று ஹாரூனையும், உதயகுமாரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 3000 ஐ.டி. ஊழியர்களுக்கு மொத்தமாக கல்தா கொடுத்த அமெரிக்க கம்பெனி - வரும் 31ம் தேதி காத்திருக்கும் முக்கிய முடிவு!