தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னய்யா (வயது 55) - ரஜிதா (வயது 35) தம்பதிக்கு சாய்கிருஷ்ணா (வயது 12), மதுப்ரியா (வயது 10) மற்றும் கௌதம் (வயது 8) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 27 ம் தேதி இரவு தனது குழந்தைகள் தயிர் சாதம் சாப்பிட்டதாகவும் அதன் பிறகு இறந்துவிட்டதாகவும் தனக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக ரஜிதா தனது கணவரிடம் போன் மூலம் கூறி உள்ளார். செக்யூரிட்டி வேலைக்கு சென்ற சென்னய்யா இரவு பணியில் இருந்து வீட்டிற்கு பாதியிலேயே வந்துள்ளார்.

வயிற்று வலியால் துடித்த மனைவி ரஜிதாவை, சென்னய்யா மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். தயிர்சாதம் சாப்பிட்டதில் மூன்று குழந்தைகள் இறந்ததாக அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனையை தொடங்கினர். இதில் முதலில் சென்னய்யா மீது சந்தேகத்தின்படி போலீசார் விசாரனை செய்தனர். அதன்பிறகு அவரது மனைவி ரஜிதாவிடம் விசாரித்து அவரது மொபைல் எண்னை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரஜிதா வேறு யாருடனோ அதிக நேரம் பேசியது தெரிந்தது. இதை உறுதி செய்த போலீசார், ரஜிதாவிடம் தங்கள் பாணியில் விசாரிக்க தொடங்கினர்.
இதையும் படிங்க: காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்.. காதலிகளை கரம் பிடித்த மன்மதன்.. தெலங்கானாவில் விநோதம்..!

ஏற்கனவே கணவர் தன்னைவிட 20 வயது அதிகமானவர் என்ற விரக்தியில் இருந்த ரஜிதாவிற்கு அவருடன் பத்தாம் வகுப்பில் படித்த சக நண்பரான சிவக்குமாருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பது தெரியவந்தது. 96 திரைப்படத்தில் வருவது போல, சமீபத்தில் நடந்த முன்னாள் மாணவர் சங்க கூட்டத்தில் பங்கேற்ற ரஜிதா, அப்பொழுது சக நண்பரான சிவக்குமாருடன் ஏற்பட்ட பழக்கமே திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியதும் விசாரணையில் தெரிந்தது.
சிவகுமார் தனது தங்கைகளுக்கு திருமணமான பிறகு ரஜிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனால் அவ்வப்போது இருவரும் பல்வேறு இடங்களில் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். தனது கள்ளக்காதலுடன் வாழ்வதற்கு குழந்தைகள் இடையூறாக இருக்கும் என ரஜிதா நினைத்துள்ளார். இதனால் சம்பவநாளில் குழந்தைகள் தூங்கிய பின்னர் ஒருவர் பின் ஒருவரை முகத்தில் தலையனை வைத்து அழுத்தி, தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். பின்னர் தயிர்சாதத்தை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் இறந்ததாகவும், தனக்கும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் நாடகம் ஆடியதும் அம்பலமானது.

இதனை அடுத்து போலீசார் ரஜிதா மற்றும் அவரது காதலன் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 96 படத்தில் வருவது போன்று, முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட பழக்கமே திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு வழிவகுத்து. மூன்று குழந்தைகளை கொலை செய்யும் நிலைக்கு தள்ளியது என போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 குழந்தைகளை பெற்ற தாயே கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் ஆணவக்கொலை.. பிறந்தநாளில் 17 வயது சிறுவன் மரணம்.. பெண்ணின் தந்தை செய்த கொடூரம்..!