நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் “ஜெகஜால கில்லாடி” என்ற படத்தை தயாரித்துள்ளனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.
இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடன் தொகையை திருப்பி தராததை அடுத்து, இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வசூலிக்க ஏதுவாக ஜெகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டிருந்தார்.

உரிமைகளை பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கூறியபொழுது படம் முழுமை அடையவில்லை என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்தியஸ்தரின் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலத்தில் விட உத்தரவிடக் கூறி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தற்பொழுது வரை கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் 5 ஆயிரத்து 543 வசூலிக்க வேண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு அவகாசம் கேட்டபோதும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கினுடைய விசாரணையை மார்ச் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: தலைக்கேறிய போதை.. விடிய விடிய ஓட்கா குடித்த கல்லூரி மாணவி.. அதீத மதுபோதையால் இறந்த போன சோகம்..