"நாடாளுமன்றத்தில், அணை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்' அது குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது. "நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் இருந்தும், அரசு நிர்வாகம் இன்னும் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை" என்று, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா மாநில அரசுகளுக்கு இடையே நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை வழக்கு, நீதிபதிகள் சூரியகாந்த், திவங்கர் தத்தா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: திபெத்தை திடுக்கிட வைத்த நிலநடுக்கம்... 95 பேர் பலி, 130 பேர் படுகாயம்..
அப்போது கேரள அரசு தரப்பில், "130 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக
உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அணை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்றியது, ஆனால் அப்போது இருந்தே தொடர் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.

நீண்ட தூக்கத்திலிருந்து...
அது குறித்து தனது அதிர்ச்சியை வெளியிட்ட நீதிபதிகள், "சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அணையின் பாதுகாப்புக்கு தேசிய குழுவை மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை. அணை பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட போதும், நிர்வாகம் இன்னும் ஏன் நீண்ட தூக்கத்திலிருந்து மீளவில்லை ? என்பது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது" என்று தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி கிருஷ்ணமூர்த்தி, "இந்த சட்டத்தின் கீழ் அணை பாதுகாப்பு ஆணையத்தினை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அணையின் கட்டமைப்பு குறித்து தணிக்கை செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மேலும் கூறிய நீதிபதிகள், "அணை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு
5 (2), 5 (1) ஆகியவற்றின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசிய குழுவை இந்த சட்டம் செயல்பட தொடங்கிய நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். மேலும் அதன் பிறகு அந்தக் குழு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மீண்டும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இத்தகைய தேசிய குழு இதுவரை அமைக்கப்படவில்லை என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட தேசிய குழுவின் அரசியல் அமைப்பு அல்லது செயல்பாடுகள் தொடர்பான விதிமுறைகள் கூட வாக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.

இச்சட்டத்தில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் பொறுப்பு தொடர்பாக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் அந்த அமைப்பிடமிருந்து விவரம் பெற்று தெரிவிக்க வேண்டும்'' என்று தெரிவித்தது.
முன்னதாக முல்லைப் பெரியாறில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் அணைக்கு சேதத்தை ஏற்படுத்தினால் அணையின் கீழ் பகுதிகளில் வசிக்கும் 50 முதல் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அணையின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரர் மேத்யூஸ் ஜே. நெடும்பாறை கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமானம், சாலை போக்குவரத்து பாதிப்பு