கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே, தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்ட செய்தியில், "தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?" என்று தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில், "தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை, பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன், பாராளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திமுக. பாராளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது எப்படி அது தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெளிவாகக் கூறியிருந்தும், ஏன் இந்தப் பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மு.க. ஸ்டாலின்? கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே, தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன." என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்க வீட்டு பிள்ளைங்கள இந்தி படிக்க வைச்சுட்டு பொது இடத்தில் இந்தி எழுத்துகளை அழிப்பீங்களா.? திமுகவை தெறிக்கவிட்ட தமிழிசை.!