மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பட்டிருப்பதைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக பெற்றுள்ளது. பெரியார் மண்ணில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. அன்று எல்லையில் திருத்தணியைக் காக்கப் போராடியது போல இன்று தமிழகத்தின் உரிமையைக் காப்பதற்கு குரல் கொடுக்க ஒன்று கூடியுள்ளோம். தமிழகத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது. மத்திய பட்ஜெட் வெற்று அறிக்கையாகத்தான் இருக்கிறது. இதில், தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எதுவுமில்லை.

விவசாயிகளின் 4 ஆண்டுகள் போராட்டத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்பட எந்தக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற எந்தத் திட்டமும் இல்லை. மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் எதுவிம் இல்லை. ரயில்வேயிக்கு கூடுதல் நிதியும் இல்லை. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு நிதி இல்லை. பெஞ்சல், மிக்ஜாம் எனப் புயலுக்கு நிவாரணம் தரவில்லை. மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை. அத்திட்டத்துக்குக் கடன் தருகிறோம் என சொல்வது என்ன நியாயம்? மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஆட்சியா அல்லது வட்டிக் கடையா? தமிழகத்தை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நிதி கொடுக்க மறுக்கிறார்கள்.
நீங்கள் எங்களுக்கு நிதி தராமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் எல்லோரையும் வஞ்சிப்பவர்கள். நாங்கள் எல்லோரையும் வாழ வைப்பவர்கள். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடம் என்ன எதிர்பார்த்தாரோ அதைத்தானே நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கான நிதியுதவி பட்ஜெட்டில் தொடர்குறைப்பு: ‘சப்கா விகாஸ்’ என மோடி அரசு சொல்வது உண்மையா?

இங்கே ஓர் ஆளுநர் இருக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் கெட்ட நோக்கத்துடன் அவர் பேசி வருகிறார். தொழிற்சாலைகள் வெளி மாநிலத்திற்குப் போவதாக எந்த ஆதாரத்தில் பேசுகிறார்? மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தமிழகத்தைப் பாராட்டுகிறது. இந்த ஆளுநரின் பாராட்டு எங்களுக்குத் தேவையில்லை. தமிழகத்தில் 2026இல் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க, ஆளுநரும், அண்ணாமலையும் போதும்.
தமிழக வளர்ச்சியைத் தடுக்க பார்க்கிறார்கள். ஆனால், அது எந்தக் கொம்பனாலும் முடியாது. அதனால்தான் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று பார்க்கிறார்கள். புதுப்புது பிரச்சினையை கிளப்பி கலவரம், வன்முறை செய்யலாம் என்று செயல்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழர் என்ற உணர்வோடு மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் முடிந்தவரைக்கும் தடையை ஏற்படுத்துங்கள். நாங்கள் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம். உங்களுக்கும் (பாஜக), உங்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுகவுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதையும் படிங்க: பட்ஜெட்டில் தமிழகம் பெயர்கூட இல்லை.. மோடி அரசுக்கு எதிராக பொங்கிய திமுக.. அதிரடியாக கட்சியினருக்கு உத்தரவு..!