பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் உற்சவ அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேரோடும் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகள் ஒலிக்க திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 11.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி.. பராசக்தி என விண்ணை பிளக்கும் அளவிற்கு பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் வழக்கு.. நிலம் கையகப்படுத்தும் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை..!

தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு வாகனத்திலும் பாத யாத்திரையாகவும் வருகை தந்து அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், கோவிலுக்கு வந்து மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அலுவலர்கள், கிராம மக்கள் செய்தனர். சமயபுரம் வரும் பக்தர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள், குடிநீர்,தற்காலிக கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், வாகனப் போக்குவரத்தை சீர்படுத்தவும் 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல் துறை சார்பில்பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, கூட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்.. ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!