தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன் லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்ததையும் எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: குடமுழுக்கு தொடர்பாக நாம் தமிழர் தாக்கல் செய்த மனு.. அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் சஜ்ஜன் பூவையா ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது, கார் ரேஷ் ,வீடியோ கேம், கேண்டி க்ரஷ் உள்ளிட்ட பல ஆன்லைன் விளையாட்டுகள் உள்ள நிலையில் அவற்றை ஒழுங்குபடுத்தாமல் ரம்மியை மட்டும் ஒழுங்குபடுத்தியுள்ளதாக கூறினர்.

இரவு 12 மணி முதல் காலை 5மணி வரை ஆன்லைனில் ரம்மி விளையாட மற்ற எந்த மாநிலங்களிலும் தடை இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தான் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஐந்து மணி நேரம் விளையாடக்கூடாது என்ற விதி தங்களை கடுமையாக பாதிக்கும் எனவும்
தொழில் செய்யும் உரிமையை பாதிப்பது போல் இந்த விதி உள்ளதாகவும் நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.
மத்திய அரசின் சட்டத்தின் கீழ் வரும் ரம்மி விளையட்டை மாநில அரசு ஒழுங்குபடுத்த முடியாது எனவும் இதனை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாகவும் கூறப்பட்டது.
தமிழக அரசு, தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

வாழ்வாதரத்திற்காக ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களும் அதனை தொழிலாக கொண்டவர்களும் உள்ளதாகவும் ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட 5 மணி நேரம் விளையாடக்கூடாது என்ற விதிமுறை ஒழுங்குபடுத்துவது அல்ல மாறாக முற்றிலுமாக தடை விதிப்பது போன்றது தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவில் கார் ரேஷ் வீடியோ கேம் விளையாடினால் கூட உடல் நலம் பாதிக்கப்படும் அதுக்கு ஏன் தடையில்லை. ஒருவர் இரவு 2 மணிக்கு ஆர்டர் செய்து சாப்பிட்டால் அப்படி சாப்பிடக்கூடாது என சொல்ல முடியுமா ? எனவும் கேள்வி எழுப்பினர்.
வயதை உறுதிப்படுத்த ஆதார் தேவையில்லை எனவும் எந்த ஆவணங்களை வேண்டுமானாலும் அளிக்கலாம் என மத்திய அரசின் விதி உள்ள நிலையில் கட்டாயம் ஆதரை அளிக்க வேண்டுமென கட்டாயப்படுத்த முடியாது என வாதிடப்பட்டது.
சிறுவர்களும் ஆதார் பெற முடியும் என்ற நிலையில் வயதை சரி பார்ப்பதற்கான ஆவணமாக ஆதார் எப்படி இருக்க முடியும் என நிறுவனங்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

மற்ற விளையாட்டுகளில் ஒருவர் வெற்றி பெற்று மற்றொருவர் தோல்வி அடைந்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை ஆனால் இங்கு தோல்வி அடையும் ஒருவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தனது மாநில எல்லைக்குள் இருக்கும் மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வரலாமே? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுமே அடிமைப்படுத்தும் வகையில் இருப்பதில்லை சில மட்டுமே அடிமைப்படுத்தும் வகையில் உள்ளன. அது போன்ற விளையாட்டுகளை மாநில அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும் நீதிபதிகள் கூறினர். மதுபானம் விற்பதற்கு கூட நேரகட்டுப்பாடு உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
வாதம் நிறைவடையததை அடுத்து வழக்கை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஏப்ரல் 21-க்குள் கொடிக் கம்பங்களை அகற்றுங்கள்.. தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிமன்றம்..!