மக்களவையில் வக்பு திருத்த மசோதா ஏப்.2 இல் நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஏப். 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். கடந்த 8-ம் தேதி வக்பு திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் திமுக சார்பில் ஆ. ராசா, தவெக சார்பில் விஜய் ஆகியோரும். மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் தங்களை கலந்தாலோசிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று மத்திய அரசு கோரியுள்ளது. இதற்கிடையே வக்பு திருத்த சட்டத்தை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அகில பாரத இந்து மகா சபா, இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் சட்டத்துக்கு ஆதரவாக மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதையும் படிங்க: கோமாளித்தனமான வக்பு சட்டம்.. காங்கிரஸ் ஆட்சியில் ரத்து.. இஸ்லாமியர்களுக்கு ப.சிதம்பரம் வாக்கு.!
இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது. எனவே, இந்த வழக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பல்கலை. வேந்தர் ஆளுநர்.. துணைவேந்தர்களை நியமிக்க முடியாதா.? பாலகுருசாமி காட்டம்!