''வாரிசு அரசியலே திராவிடக் கொள்கையின் பலம். திமுக கூட்டணியை யாரும் அசைத்துக் கூட பார்க்க முடியாது'' என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அவர், '' சில பேர் சொல்லுவாங்க வாரிசு அரசியல் என்று. இந்த வாரிசுகள் தான் எங்களது பொது வாழ்க்கைக்கு பலமே. அதுதான் மிக முக்கியமானது. அப்பா ஒரு கட்சி, பிள்ளை ஒரு கட்சி என்று போனால் கொள்கை வெற்றி அடையவில்லை என சொல்வார்கள். ஆனால் அப்பா, மகன், பேரன் எல்லாமே கொள்கையின் அடிப்படையில் வாரிசாக இருக்கிறார்கள். இங்க நம்ம சம்பளத்தை வாங்கிட்டு அரசாங்கத்துக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்தி கொண்டிருக்கிறார் ஒரு வடநாட்டிலிருந்து வந்த ஒரு ஆசாமி கவர்னர்.

இங்கே நம்ம வரிப்பணத்தில் இருந்து மாநில அரசு கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு எதிர்க்கட்சி தலைவராக இவர் ஆயிட்டார். எதிர்க்கட்சி கூட அல்ல, அந்த வார்த்தை கூட சரியில்லை. எதிரி கட்சி தலைவரா இருக்கார். அரசை விமர்சியுங்கள். வேண்டாம், என்று சொல்லவில்லை. கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே போய் ஆர்எஸ்எஸ் கொடியை போட்டுக் கொண்டு அங்கே செய்யவேண்டும். அதுதான் மிக முக்கியம். கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது. இந்த அரசாங்கத்தினுடைய கொள்கையை விமர்சிப்பதற்கு துளி கூட இந்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
இதையும் படிங்க: 'ஆண்மை என்றால் வீரம்...' அமைச்சர் விட்ட வார்த்தை - திருத்திய துணை முதல்வர் உதயநிதி...!

ஒரு அம்மாஞ்சியாக இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்எஸ்எஸ்க்கு எடுபுடியாக டெல்லி அரசினுடைய ஏஜென்ட்டாக இருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவது என்று சொன்னால் அதை எதிர்த்து சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை பெற்றிருக்கும் இயக்கமாக உள்ளோம். கொள்கை அடிப்படையில் இணைந்த திமுக கூட்டணி நல்ல கூட்டணி. இந்த கூட்டணியை அவர் வருவார், இவர் வருவார் என கூறுகிறார்கள். எவரும் வர மாட்டார்கள். பல பேர் தான் வந்து கொண்டுள்ளார்கள். ஆகவே தான் திமுக கூட்டணியை அசைத்து கூட பார்க்க முடியாது.

இது மணல் வீடு அல்ல, மெழுகு பொம்மை அல்ல... இது ஒரு இரும்பு கோட்டை ... எக்கு கோட்டை. கடற்பாறை. கடப்பாறை இல்லை கடப்பாறை என்பது காவிக்கு தான் சொந்தம். அவர்களுக்கு இடிப்பதே வேலை. இடித்து கல்லை தூக்கிக் கொண்டு போவது காவிகளின் வேலை. அந்தக் கல்லுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்தார் நமது துணை முதலமைச்சர். ஒரே கல்லை தூக்கி தான் வெற்றியை பெற்றுள்ளோம். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரே செங்கலை காட்டி எதிரிகளை ஓடவிட்டார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததா? அது குறித்து இதுவரைக்கும் மருத்துவமனை கட்டி முடிக்கவில்லை. இந்தியாவிற்கு வழிகாட்டக் கூடிய ஆட்சி திராவிட ஆட்சி. முதலமைச்சரை பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என சொல்லுகிறோம் என்றால் அவர்களுக்காக அல்ல. நமக்காக. உங்களுக்காக... தாய்மார்களுக்காக. எனவே சிந்தியுங்கள் செயலாற்றுங்கள். நல்லதே நடக்கும்'' எனப்பேசினார்.
இதையும் படிங்க: நேற்று அப்பா ஸ்டாலின்… இன்று மகன் உதயநிதி … கவிதை 'சுட்டும்' கலைஞரின் வாரிசுகள்..!