உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏஎன்ஐ ஊடகத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “மொழி என்பது மக்களைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும். தமிழ் இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். அதன் வரலாறு சமஸ்கிருதத்தைப் போலவே பழமையானது. அதனால்தான் காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் நடைபெறுகிறது. ஒவ்வோர் இந்தியரும் தமிழ் மீது மரியாதை வைத்துள்ளார்கள். ஆனால்,அவர்கள் (திமுக) ஏன் இந்தியை வெறுக்க வேண்டும்?

இது வெறும் குறுகிய அரசியல் லாபத்துக்கானது. திமுகவின் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக உணர்ந்துள்ளதால், மாநிலங்கள், மொழி அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். மக்கள் எப்போதுமே இதுபோன்ற பிளவுவாத அரசியலுக்கு எதிராக எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, பிற மொழிகளைக் கற்பிக்கும்போது, தமிழகப் பல்கலைக்கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதில் என்ன தவறு?
அதேபோல தொகுதி மறுவரையறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கி விட்டார். அதன் பின்னரும் அரசியலுக்காக ஸ்டாலின் அதுகுறித்து குற்றம் சாட்டி வருகிறார்.” என்று யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி எக்ஸ் தளத்தில் எதிர்வினையாற்றியுள்ளார். அதில், “இருமொழிக் கொள்கை, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான, வலுவான குரல் தேசிய அளவில் ஒலிப்பதால் பாஜக கலக்கமடைந்துவிட்டது. அக்கட்சியின் தலைவர்கள் அளிக்கும் பேட்டியிலிருந்து அது புலப்படுகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நமக்கு வெறுப்பு பற்றி பாடம் எடுக்கிறார். எங்களை விட்டுவிடுங்கள். அவர் வெறுப்பு பற்றி பாடமெடுப்பது நகை முரண். இது அரசியல் அவல நகைச்சுவையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. ஆதிக்கத்தைதான் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இது வாக்கு அரசியலுக்கான கலவரம் கிடையாது. நீதிக்கான, மாண்புக்கான போர்.” என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
.
இதையும் படிங்க: டோல்கேட் கட்டண உயர்வு எதிரொலி..! சுங்கச்சாவடிகளில் போராட்டம்..!
இதையும் படிங்க: தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்! சூடுபிடிக்கும் அரசியல் களம்...