ஜாமீன் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளி வருவதில் தாமதம் ஏற்பட்டால் அது மனித உரிமை மீறல் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜாமீன் வழங்கப்பட்ட பின்னரும் பிணைத்தொகை செலுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாமல் 800க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் உள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம்,எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் சார்பில், ஜாமீன் கிடைத்த பின்னரும் சிறையில் உள்ள கைதிகள் தொடர்பாக அறிக்கை பெறப்பட்டு, அவர்களை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தினசரி அடிப்படையில் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பொன்முடி மீது சேறு வீசியவருக்கு ஜாமீன்.. பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை..!
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது போல ஜாமீன் பெற்ற பிறகும் சிறையில் இருக்கும் கைதிகளின் விவரங்களை சட்டப் பணிகள் ஆணையத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களிடமோ பகிர்ந்து கொள்ள வேண்டுமென சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக அவர் விடுவிக்கப்பட வேண்டுமென கூறியுள்ள நீதிபதிகள், ஜாமீன் கிடைத்த பின்னரும் சிறையில் இருந்து வெளி வருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜாமீன் கிடைத்த பின்னர் எந்த கைதியும் சிறையில் இருப்பதை தவிர்க்கும் வகையில் நடைமுறையை பின்பற்றுமாறு சிறை அதிகாரிகளுக்கும், சட்டப் பணிகள் ஆணையத்திற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சிறைக்குள் வந்த திரிவேணி சங்கமம்.. பாவங்களை போக்க புனித நீராடிய 90,000 கைதிகள்..!