காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்..! சமூக வலைத்தளத்தில் கண்டனங்களை பதிவிட்டு வரும் சினிமா பிரபலங்கள்..!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு சினிமா பிரபலங்கள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்று உலக நாடுகள் அனைவராலும் பேசப்பட்டும் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வரும் ஒரே விஷயம் என்றால் இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் மனதை உறைய வைப்பதாக இருந்தது. இதுவரை ரஷ்யா உக்கரைன் தாக்குதலை கேட்டு கொண்டு இருந்தோம். அடுத்து, இஸ்ரேல் மற்றும் காஸாவின் தாக்குதலை கேட்டு கொண்டு இருந்தோம். தற்பொழுது அந்த வரிசையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து தற்பொழுது உலகம் முழுவதும் உற்று நோக்கும் விதமாக மாறியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.
மேலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை குறித்து பார்த்தால் அந்த இடத்தில் இருந்து தப்பித்து கூட ஓடமுடியாத நிலையில் இருந்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த இடத்தை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது. இங்கு காடுகள், ஏரிகள், புல்வெளிகள் மட்டுமே அதிகம் காணப்படும். இந்த இடத்திற்கு நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோத்தான் செல்ல முடியும். கார்களிலோ அல்லது கனரக வாகனங்களிலோ செல்ல முடியாது. இங்குச் சென்ற சுற்றுலா பயணிகளைத்தான் தீவிரவாதிகள் மிக நெருக்கமாக இருந்து சுட்டுக் கொன்றனர்.
இதையும் படிங்க: த்ரிஷா முதல் ரம்யா கிருஷ்ணன் வரை... நடிகைகளுக்கு பார்ட்டி வைத்த சூர்யா - ஜோதிகா ஜோடி! என்ன ஸ்பெஷல்?
இப்படி இருக்க, இந்த பயங்கர வாத தாக்குதலுக்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது தமிழக சினிமா வட்டார இயக்குனர்கள் முதல் நடிகர் நடிகைகள் வரை தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யா பதிவிட்டுள்ள பதிவில், "பஹல்காம் தாக்குதலை அறிந்து அதிர்ச்சியில் மனமுடைந்து போனேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். இனி யாருக்கும் இப்படியான துயரம் நடக்கக்கடாது. இந்தியா எப்போதும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கும்". என பதிவிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து, அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில், " பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும். ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது". என பதிவிட்டுள்ளார்.
மூன்றாவதாக நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்துபோனேன். மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது. நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்,சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும். என கூறியுள்ளார்.
இப்படி இந்த தொடர் தாக்குதலுக்கு பலதரப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபலங்களுடன் அட்டகாசமான போஸ்... தொகுப்பாளினி ரம்யாவின் கியூட் கிளக்ஸ்..!