சிவாஜி வீடு ஜப்தி விவகாரம்... மூத்த மகன் ராம்குமாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
நடிகர் சிவாஜியின் வீடு மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மூத்த மகன் ராம்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். தயாரிப்பாளரும் நடிகருமான இவருக்கு துஷ்யந்த் என்ற மகன் உள்ளார். இவர் சில படங்களில் நடித்த போதும் அவருக்கு எதுவும் கை கொடுக்கவில்லை. இதனால் நடிப்பை விட்டுவிட்டு திரைப்பட தயாரிப்பு விநியோகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். அதிலும் நஷ்டம் ஏற்படவே தனது தந்தை மற்றும் சித்தப்பாவின் சிவாஜி ப்ரொடக்சன்சில் பணிபுரிந்து வந்தார். பிறகு தனியாக படம் தயாரிப்பதாக கூறி துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் படம் ஒன்று தயாரிக்கப்பட்டது.
அதில், நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்த படத்திற்கு ஜகஜால கில்லாடி என்று பெயரிடப்பட்டது. இந்த பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: நயன்தாராவின் நிம்மதியை கேஸ் போட்டு கெடுத்த தனுஷ்.. இவர்கள் ஈகோ சண்டையில் பாவமாக சிக்கிய நெட்பிளிக்ஸ்..!
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்னை இல்லத்தின் மீது ராம்குமாருக்கு எந்த உரிமையும் அல்லது பங்கும் இல்லை எனக்கூறினார். இதனையடுத்து, அன்னை இல்லத்தின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு எந்த உரிமையும் கோரமாட்டேன் எனவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: நயன்தாராவிடம் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கு.. நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கு தெரியுமா..?