‘டிமென்ஷியா’ என்றழைக்கப்படும் மறதி நோய் பாதிப்பில் தீவிரமானதாகக் கருதப்படுவது அல்சைமர். மனித மூளையில் லட்சக்கணக்கான நரம்புகள் உண்டு. இவற்றில் சிறு தேய்மானம் ஏற்பட்டால்கூட நம் உடலின் ஒட்டுமொத்தச் செயல்பாடும் பாதிக்கப்படும். மூளை செல்களில் ஏற்படும் சிதைவு அல்சைமரை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் 5.5 கோடி பேர் மறதி நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான முதியவர்களுக்கு அல்சைமர் நோயினால் நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது.

முதியவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கு நாள்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், விபத்துகளால் ஏற்படும் தலைக்காயம், போதைப் பொருள் பயன்பாடு போன்றவை முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க மருத்துவச் சங்கம் ஸ்வீடனைச் சேர்ந்த 1,213 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில் ரத்தப் பரிசோதனைகள் மூலம் அல்சைமர் மறதி நோயைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தது.

மேலும், பிற பரிசோதனைகளுடன் ஒப்பிடுகையில் ரத்தப் பரிசோதனைகள் விரைவான முடிவுகளை அளித்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறதி நோய்களுக்கான பரிசோதனைகளுக்குப் பெரும்பாலும் அதிகச் செலவாகும். இந்நிலையில் ரத்தப் பரிசோதனை மூலம் அல்சைமரை உறுதிப்படுத்தலாம் என்பது மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது.