கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் அருகே உள்ள எம் புதூரை சேர்ந்தவர் நேரு (60) இவர் அதிமுக கிளை கழக செயலாளர் ஆக உள்ளார். இவரது மனைவி எம் புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருந்தார். இந்நிலையில் இவர் தனது முந்திரி தோப்பில் முந்திரி கொட்டைகள் பொறுக்குவதற்காக நாகியநத்தம் பகுதியை சேர்ந்த சரண்யா (25), கல்பனா (25), ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரண்யா, கல்பனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேருவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 150 அடி தேர் சாய்ந்து விபத்து! பரிதாபமாக பறிப்போன உயிர்கள்...

அங்கு நேருவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யா கல்பனா ஆகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர்.
இதையும் படிங்க: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!