சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை!
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை வெப்பநிலையானது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் ஆங்காங்கே வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழலில் நிலவி வந்தது. இந்த நிலையில் வெப்பநிலையானது தொடர்ந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதேபோன்று தற்போது தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவி வருகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. காவலர்களுக்கு இலவச நீர்-மோர் பந்தல் திறப்பு!
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வருகின்ற 28ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 29ஆம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்ப நிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
இதனால் தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 லிருந்து 35 டிகிரி செல்சியஸ் ஓட்டையும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஓட்டியும் இருக்கக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வானிலை மையம் வெளியிட்ட கூல் நியூஸ்.. தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 24-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..