காட்டுக்குள் ஒளிந்து தண்ணி காட்டிய ரவுடி.. சுட்டுப்பிடித்த போலீஸ்.. சினிமாவை மிஞ்சும் சேஸிங்..!
போலீசாரை தாக்கி தப்ப முயன்ற செங்கல்பட்டு ரவுடி அசோக்குமாரை ஆப்பூர் வனப்பகுதிக்குள் வைத்து போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மிகவும் வளர்ந்த மாவட்டங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியில் இருப்பதால், தொடர்ந்து ரவுடிகளால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் சிறு நிறுவனங்கள், வியாபாரிகளை மையமாக வைத்து அவர்களின் மிரட்டி மாமுல் வாங்குவதை இந்த ரவுடிகள் முக்கிய வேலையாக செய்து வருகின்றனர். இதுபோக கஞ்சா விற்பது, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ரவுடிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரவுடிகளை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அசோக் (28). காவல்துறையின் ஏ பிளஸ் வகை சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை கொலை உட்பட 4 கொலை வழக்குகளும், போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகள் உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிலும் அசோக் மீது நாட்டு வெடிகுண்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், திருப்போரூர் பகுதியில் இவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் எதிர்பாராத விதத்தில், படித்ததில் அவருடைய ஒரு கண் பார்வை முற்றிலும் செயல் இழந்தது. அந்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: நெல்லை ஜாகீர் உசேன் கொலை... தேடப்பட்டு வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை...!
குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க அசோக் கற்றுக்கொண்டார். நாட்டு வெடிகுண்டு செய்வதில், கை தேர்ந்த ரவுடியாக அசோக் இருந்து வருகிறார். குட்டி ரவுடிகள் முதல் பெரிய ரவுடிகள் வரை என அனைவருக்கும் பரிச்சயமாக அசோக் இருந்து வருகிறார். பல முக்கிய கொலைகளுக்கு பின்னணியில், அசோக் செய்த நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ரவுடி அசோக் குமாரைச் செங்கல்பட்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூர் வனப்பகுதியில், அசோக் குமார் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அசோக் குமாரை போலீசார் கைது செய்ய சென்றனர்.
அப்போது அசோக் குமார் அங்கிருந்த காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அசோக்குமார் தப்பிக்காமல் இருப்பதற்காகவும், தற்காப்பிற்காகவும் போலீசார் அசோக் குமாரின் கால் முட்டிக்கு சுட்டு பிடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடி கொண்டிருந்த, அசோக் குமாரை மீட்ட போலீசார் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது அசோக்குமார் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அசோக்கிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது: அதிக அளவில் கஞ்சா விற்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பதுங்கி இருந்த அசோக்கை கைது செய்ய சென்றோம். அப்போதுதான் எங்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தார். தற்காப்புக்காக அசோக்கை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொடுக்கல் வாங்கலில் தகராறு; பைனான்ஸியரின் முதுகை துளைத்த புல்லட் ... காட்பாடியில் துப்பாக்கிச்சூடு...!