திடீரென கேட்ட வெடி சத்தம்.. கை விரல்கள் துண்டான சோகம்.. வாணியம்பாடியில் பரபரப்பு..!
வாணியம்பாடி அருகே சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கைவிரல் துண்டான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சபரி (வயது 24) இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த வெடிகள் மற்றும் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் சபரி என்பவருக்கு கை விரல்கள் துண்டாகியது. கண்கள் மீது வெடிபொருட்கள் பட்டு கண்கள் படுகாயம் அடைந்தன.
வெடி வெடித்த சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக விரைந்து சென்று பார்த்த போது படுகாயங்களுடன் சபரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே சபரியை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சபரி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வாணியம்பாடி நகர போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி நகர போலீசார் நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் தயாரிக்கும் போது வெடித்து சிதறியதா? அல்லது பதுக்கி வைத்திருந்த போது வெடித்ததா? என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்து வேலூர் தடவியல் மற்றும் வெடி பொருள் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ராமமூர்த்தி என்பவரின் வீட்டில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 5 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி காவலாளி குத்திக்கொலை.. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. வாணியம்பாடியில் பயங்கரம்..!
இது தொடர்பாக ராம மூர்த்தி மற்றும் அவரது மகன் ஐயப்பன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த அம்பலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் வேலூர் தடவியல் மற்றும் வெடி பொருள் நிபுணர்கள் ஆய்வு செய்து நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் தயாரிக்க வைத்திருந்த வெடி மருந்துகள் மற்றும் மூல பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் உள்ள அவரது உறவினரான சபரி வீட்டில் வெடிகள் வெடித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதியில் ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாக நாட்டு வெடிகள் பதுக்கி வைத்ததால் விபத்து ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே ஊர் மக்கள் சார்பில் இவர்களை அழைத்து கூட்டம் போட்டு இந்த பகுதியில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வெடிகள் மற்றும் பட்டாசுகள் தயாரிக்கவோ, பதுக்கி வைக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் தொடர்ந்து சட்டதிற்கு புறம்பாக வெடிகள் தயாரிப்பது மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்வது நடைபெற்று வந்ததை வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஏன் கண்டுகொள்ளவில்லை? என்ற கேள்வி அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி காவலாளி குத்திக்கொலை.. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. வாணியம்பாடியில் பயங்கரம்..!