டெல்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் பிரசார பீரங்கியுமான அதிஷி தற்போது சக்தி வாய்ந்த புதிய பதவியை ஏற்கிறார்.
டெல்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று அவர் தேர்வு செய்யப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஆகும்.
கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களின் ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட டெல்லி சட்ட பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஆம் ஆத்மி' வீழ்ச்சிக்கு காரணமான ஸ்வாதி மாலிவால்: டெல்லி புதிய முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து!

இன்று நடந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி, எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் திங்கட்கிழமை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் எதிர் கட்சித் தலைவர் பெண் டெல்லி முதலமைச்சரை எதிர்கொள்ள இருப்பது தான்
முதல்வர் ரேகா குப்தாவினை எதிர்ப்பதற்கு ஒரு வலிமையான பெண் முகம் வேண்டும் என்பதால் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கல்காஜி எம்எல்ஏவான அதிஷி உட்பட கட்சியின் 22 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்களான அரவிந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் தோல்வியடைந்திருந்த நிலையில் அதிஷி எதிர்க்கட்சித் தலைவராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பின்பு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து 43 வயதான அதிஷி டெல்லி முதல்வரானார்.
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பல்வேறு பிரச்சினைகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்கொண்டு டெல்லி ஆம் ஆத்மி அரசின் முகமாக அதிஷி மாறியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட அதிஷி "சட்டமன்ற கட்சித் தலைவர் பொறுப்பு என்னிடம் ஒப்படைத்ததற்காக ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சட்டமன்ற கட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக"தனது சமூக வலைதள பதிவில் அவர் கூறியிருக்கிறார்.
"மக்கள் பிரச்சினைகளை அவையில் முழு பலத்துடன் இழப்பும் டெல்லி மற்றும் டெல்லி மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும்" என்றும் அதில் அவர் மேலும் கூறியிருக்கிறார்.
ஆக்ஸ்போர்ட் பட்டதாரி
டெல்லியில் வளர்ந்த அதிஷி 2001 ஆம் ஆண்டு செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெறுவதற்கு முன்பு ஸ்பிரிங் டேல்ஸ் பள்ளியில் பள்ளி படிப்பு முடித்தார். பின்னர் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்தார். அங்கு 2003 ஆம் ஆண்டு செவனிங் உதவித்தொகையில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றார். 2005 ஆம் ஆண்டில் அவர் மாக்டலன் கல்லூரியில் ரோட்ஸ் ஸ்காலராக ஆக்ஸ்போர்டுக்கு திரும்பினார்..

கடந்த 2020ம் ஆண்டு டெல்லி பேரவைத் தேர்தலில் தெற்கு டெல்லியின் கல்காஜி தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட அதிஷி, 2025 தேர்தலில் கடுமையான போட்டிக்கு மத்தியில் பாஜக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதுரியை தோற்றடித்து வாகை சூடியிருந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்டெல்லியிலுள்ள 70 பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பின்பு தலைநகரில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2015, 2020 தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த தேர்தலில் 22 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. தொடர்ந்து மூன்று தேர்தலில்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் முந்தைய ஆம் ஆத்மி கட்சியின் செயல்திறன் பற்றிய சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பாஜக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அழிவு ஆரம்பம்… 3 பேரை தூக்கிய பாஜக... கிடுகிடுக்கும் ஆம் ஆத்மியின் அஸ்திவாரம்..!