ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இன்று ஸ்படி லிங்கம் தரிசனம் செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்ற சன்னியாசி பக்தர் வரிசையில் நின்றிருந்தபோது கூட்டு நெரிசலில் சிக்கி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருக்கோவில் அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சமீபத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத்தலமும் ஆனது திருச்செந்தூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஓம்குமாருக்கு மலர்விழி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். உடன் வந்த ஓம்குமார் குடும்பத்தினர் அவரது உடலை கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது.
இதையும் படிங்க: சூப்பர்..! ராமேஸ்வரத்திற்கு புதிய விமான நிலையம்.. பட்ஜெட்டில் அதிரடி..!

இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது; நேற்றைய தினம் திருச்செந்தூர் கோவிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். நேற்று திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு , இன்று என்ன கதை வைத்திருக்கிறார்?

கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.

குறிப்பாக, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபு தான், இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் அநாகரீகம் அண்ணாமலை.. செல்வப்பெருந்தகை கடும் தாக்கு.. செந்தில் பாலாஜி, விஜய்க்கு சப்போர்ட்..!