அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மனம் குளிரும் பினராயி விஜயன்!
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தக் கூடியது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசின் 10 மசோதாக்களை கையாண்ட விதம் சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்று வருகின்றன. அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். "மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்றத்தின் ஜனநாயக உரிமைகளையும் நிலைநிறுத்துகிறது.
அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகவும் இத்தீர்ப்பு அமைகிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 23 மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கு எதிராக சட்டப் போராட்டத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. இத்தீர்ப்பு, கேரளா எழுப்பிய பிரச்சினைகளின் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது" என்று பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் அனுமதி வழங்க மறுத்தார். கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தச் சூழலில் இத்தீர்ப்பு கேரள அரசுக்கும் பொருந்தும் வகையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்.என். ரவியை பதவியை விட்டு தூக்குங்க.. ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்த சிபிஎம்!
இதையும் படிங்க: வியக்க வைக்கும் புதிய பாம்பன் பாலம்.. ஒரு பொறியியல் அதிசயம்.. ரயில்வே அமைச்சர் புகழாரம்.!!