×
 

மசோதாக்களை 3 ஆண்டுகள் நிறுத்தி வைத்தது ஏன்..? தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. இன்றும் விசாரணை.!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்தது குறித்து ஆளுநர் ஆதாரப்பூர்வமாக விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு புகார் கூறி வருகிறது. அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி, பி.வில்சன், அபிஷேக் சிங்வி ஆஜராயினர்.


"ஆளுநர் மசோதாக்களின் தன்மையை ஆராயாமல் ஒருவித வெறுப்புணர்வுடன் செயல்படுகிறார். குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வதாக இருந்தாலும், அதுபற்றி அரசுடன் ஆலோசித்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை. சட்டப்பேரவையில் மசோதாக்கள் குறித்து அரசு எடுத்த முடிவை ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட முடியாது. சொந்த விருப்பு வெறுப்பையும் புகுத்த முடியாது. மசோதாவை திருப்பி அனுப்ப காரணத்தை விளக்க வேண்டும். ஆளுநரின் செயல்பாட்டால் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை. மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தேவையின்றி குறுக்கிடுகிறார். மத்திய அரசின் ஏஜென்ட்போல செயல்படுகிறார். அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்ற உத்தரவுகள், மாநில அமைச்சரவையின் முடிவுகள் ஆகியவற்றையும் அவர் மதிப்பதில்லை" என்று தமிழக அரசு தரப்பு வாதிட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி, "ஆளுநரின் செயல்பாடுகள் கூடுதலாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி மட்டுமே வைத்தார். மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பவில்லை" என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  நீதிபதிகள், "ஆளுநரின் பதவி, அதிகாரத்தை குறைத்து மதிப்பிடவில்லை. மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள அவருடைய செயல்பாடு குறித்து மட்டுமே விசாரிக்கிறோம். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 14 மசோதாக்களில் இரண்டை மட்டும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது ஏன்? மற்ற 12 மசோதாக்களை 3 ஆண்டுகளாகவா ஆளுநர் ஆய்வு செய்கிறார்? மசோதாக்கள் மறு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டால் கிடப்பில் போட்டு மவுனம் காப்பது ஏன்?

குடியரசுத் தலைவர் அந்த மசோதாக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? அரசு செய்யும் விஷயங்கள் பிடிக்கவில்லை என்றால் அது ஆளுநரின் சொந்த கருத்தாகத் தானே இருக்கும்? மசோதாக்களை ஆண்டுக்கணக்கில் நிறுத்திவைக்க அரசியலமைப்பு சட்டத்தில் வழிவகை உள்ளதா? ஆளுநர் 3 ஆண்டுகளாக ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை ஆதாரப்பூர்வமாக ஆளுநர் விளக்க வேண்டும்." என்று தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்றைக்குத் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: முதுகலை மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு....

இதையும் படிங்க: ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share