முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை.. காஷ்மீர் விரைந்தது NIA.. உச்சக்கட்ட பரபரப்பு..!
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது எப்படி என முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார்.ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சவுதியில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய மோடி, டில்லியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார். பஹல்காம் சென்ற அமித் ஷா, பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், டில்லியில் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஏற்கனவே, பஹல்காமில், ராணுவம், விமானப்படை ஹெலிகாப்டர்கqள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய காஷ்மீர் எல்லையிலும், பஹல்காம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உடன் இருந்தார். ஏற்கனவே காஷ்மீரின் மலை, காடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலை அடுத்து, கடந்த ஒரு வாரமாக பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டிருந்தது.
இதையும் படிங்க: காஷ்மீர் மக்களின் ஹீரோ.. பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட குதிரைக்காரர்.. உயிரை கொடுத்து போராட்டம்..!
பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில், ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்த நிலையில், பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழு காஷ்மீர் விரைந்துள்ளது.
பயங்கரவாதிகளின் ஊடுருவல், அவர்கள் தீட்டிய சதித்திட்டம், பதுங்கியிருக்கும் இடம் குறித்து ராணுவத்தினருடன் என்ஐஏ அதிகாரிள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்கிடையே, பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இதையும் படிங்க: #PahalgamTerroristAttack உலகையே உலுக்கிய பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. #ட்ரெண்டிங்கில் NO.1..!