சவுக்கு சங்கர் வீட்டை தாக்கியவர்களை விடக் கூடாது.. ரவுண்டு கட்டும் திமுக கூட்டணி கட்சிகள்.!!
சவுக்கு சங்கர் வீட்டில் நடத்திய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், அத்துமீறி நுழைந்து மனிதக் கழிவுகளையும், சாக்கடை கழிவுகளையும் வீடு முழுவதும் கொட்டிய செயல் அநாகரிகத்தின் உச்சமானது. நாகரிக சமூகம் எவ்வகையிலும் ஏற்கத்தக்க செயல் அல்ல. பொது தளங்களில் ஒருவரது பேச்சு, அடுத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்தால், அதன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.
அதற்கான சட்டப் பாதுகாப்புகளும் இருக்கின்றன. இந்த முறையான, சட்டரீதியான வாய்ப்புகளை நிராகரித்து விட்டு, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது, சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் அராஜக செயலாகும். சவுக்கு சங்கரின் வீட்டில் நடந்த அராஜக செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.” என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கிற்கு இதுவே உதாரணம்.. சேகர்பாபுவை தூக்கத்தில் இருந்து எழுப்பச்சொன்ன தமிழிசை..!
தன் வீட்டில் நடந்த சம்வபத்துக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் காவல் துறையுமே பொறுப்பு என்று சவுக்கு சங்கர் நேற்று பேட்டியளித்திருந்தார். இந்தச் சம்வபத்தை திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக கண்டித்திருந்த நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட்டும் கண்டித்துள்ளது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் விவகாரம்.. திமுக மீது களங்கம் ஏற்படுத்த சதி.. திருமாவளவன் ஆதங்கம்!!